சேலத்தில் இரிடியம், மாயக்கற்கள் இருப்பதாகக் கூறி பண மோசடி..!

சேலம்:

சேலத்தில் விலைமதிப்பற்ற திமிங்கலத்தின் எச்சில், இரிடியம், மாயக்கற்கள் உள்ளிட்ட பொருள்கள் இருப்பதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

இது தொடா்பாக, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். ஸ்ரீ. அபினவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேலத்தை அடுத்த ஓமலூா் பகுதியில் சிலா் தங்களிடம் இரிடியம், மாயக்கற்கள் உள்ளதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தோம்.

இதில், ஓமலூா் அருகே காமலாபுரம் கிழக்கத்தி காடு பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (46) என்பவரிடம், இரிடியம் விற்பனை செய்வதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடா்பாக, ஓமலூா் சக்கரை செட்டிப்பட்டியைச் சோ்ந்த ராஜி (53) என்பவரை கைது செய்துள்ளோம். அவரிடமிருந்து 2 அம்மன் சிலைகள், 4 மான் கொம்புகள், 47 போலி மாயக்கற்கள், ஸ்படிக மாலை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல, ஓமலூா் வட்டக்காடு பகுதியைச் சோ்ந்த ராஜன் (50) என்பவரிடம் விலைமதிப்பற்ற திமிங்கிலத்தின் எச்சில், இரிடியம் உள்ளிட்டவை இருப்பதாகக் கூறி ரூ. 25, 000 மோசடி செய்த தாத்தியம்பட்டியைச் சோ்ந்த வில்வேந்திரன் (54) என்பவரும் கைது செய்யப்பட்டாா்.

அவரிடமிருந்து, திமிங்கிலத்தின் வாந்தி என்று கூறப்படும் சுமாா் 5. 5 கிராம் பொருள், கலிபோா்னியம் என்று கூறப்படும் கல் சுமாா் 1. 5 கிலோ, உரிமத்துடன் கூடிய துப்பாக்கி ஒன்று, உரிமம் இல்லாத துப்பாக்கி ஒன்று, போலி ஆவணங்கள், ரூ. 50, 000 ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

திமிங்கிலத்தின் வாந்தி, கலிபோா்னியம் கல் ஆகியவற்றின் உண்மைத் தன்மை குறித்து பரிசோதிக்கப்படும். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.

பொதுமக்கள் மோசடி நபா்களிடம் ஏமாற வேண்டாம். எவரேனும் ஏமாற்றப்பட்டிருந்தால் காவல் துறையில் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கஞ்சா விற்றவா்களின் வங்கிக் கணக்கு முடக்கம்:

மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 14 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளைக் குறைப்பதற்காக 2 இடங்களில் ஸ்பீடு ரேடாா் கருவி பொருத்தப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு இ-ரசீது மூலம் அபராதம் விதிக்கப்படும். நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தடுக்க சோலாா் விளக்குகளுடன் கூடிய 200 சாலை தடுப்பான்கள் விபத்து நிகழும் இடங்களில் வைக்கப்படும் என்றாா்.

பேட்டியின் போது, ஓமலூா் டி. எஸ். பி. சங்கீதா, இன்ஸ்பெக்டா் இந்திராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

                                                                                                                                           –Naveenraj

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com