செங்கல்பட்டு:
தமிழகத்தில் சாதி கலவரத்தை உருவாக்கி திமுக அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக செயல்பட்டு வருகிறது என, அமைச்சர் கே என் நேரு குற்றம் சாட்டியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே திமுகவின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் தலைமை தாங்கி உரையாற்றினர். அப்போது பேசிய கே.என் நேரு, திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின் விவசாய கடன் தள்ளுபடி , கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என மக்களுக்கான பல்வேறு திட்டங்களை திறன்பட செய்து வருவதாக குறிப்பிட்டார்.
மேலும், திமுக ஆட்சிக்கு வந்த உடனே கொரோனா பெரும் தொற்றை சமாளிக்க வேண்டிய பெரும் சவால் முன்வைக்கப்பட்டது. அதை மு.க ஸ்டாலின் துணிச்சலோடும், தெளிவான வழிகாட்டுதலோடும் செய்து முடித்தார் என தெரிவித்தார். ஆனால், தமிழக பாஜகவினர் திமுக குறித்தும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்தும் தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் பேசி வருவதாக விமர்சித்த கே.என் நெரு, திமுக ஆட்சி மக்களுக்கான நலனை கருத்தில்கொண்டு செயல்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், தமிழகத்தில் சாதி கலவரத்தை உருவாக்கி திமுகவின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் எனவும் அவர் விமர்சித்தார். இந்த கூட்டத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
– Dayana Rosilin