சேலம்:
மூக்கின் துவாரம் வழியாக லாரி டியூப்களுக்கு காற்று நிரப்பி சேலத்து கராத்தே மாஸ்டர் சாதனை படைத்திருக்கிறார்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள அத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். கராத்தே பயிற்சியாளரான இவர் கின்னஸ் சாதனைகள் உள்பட 97 வகையான சாதனை நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளார். இந்நிலையில் நடராஜ், தனது 98வது சாதனையை இன்றைய தினம் நிறைவு செய்தார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகாசன பயிற்சியில் மிகவும் முக்கியமான பிராணாயாமம் எனப்படும் மூச்சு பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மூக்கின் துவாரம் வழியாக லாரி சக்கரங்களில் பயன்படுத்தப்படும் 3 டியூபுகளில் காற்று நிரப்பி தனது சாதனையை அரங்கேற்றினார்.
நீதித்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் முன்னிலையில் 9 நிமிடம் 45 வினாடிகளில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையை ‘வோர்ல்டு டேலன்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’என்ற நிறுவனம் அங்கீகரித்து அதற்கான சான்றிதழை வழங்கியுள்ளது.
ஏற்கனவே தொடர் மூச்சுப்பயிற்சியில் ஈடுபட்டு வந்ததால் இந்த சாதனை எளிதாக இருந்ததாகவும், மற்றவர்கள் முறையான பயிற்சி இல்லாமல் முயற்சித்தால் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஒவ்வொரு மனிதமும் தனது வாழ்நாளில் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால் மூச்சு பயிற்சி முக்கியம். எனவே, அனைவரும் மூச்சு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்நிலையில் கராத்தே மாஸ்டர் நடராஜின் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
– Gowtham Natarajan