வெடிகுண்டு புரளியால் 15 நிமிடங்கள் தாமதம்: சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை!
சிங்கப்பூரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டில் இருந்து வந்த மர்ம மின்னஞ்சலால் விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. விமான நிலையத்தில் துருவித் துருவிச் சோதனையிடப்பட்டதில், அது வழக்கமான புரளி என்று தெரிய வந்ததையடுத்து, சென்னை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு மின்னஞ்சலில், "சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியதும் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தத் தகவலால் உடனடியாகப் பரபரப்படைந்த சென்னை விமான நிலைய அதிகாரிகள், உடனடியாகப் பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடிப் படையினர் உள்ளிட்டோருக்கு அவசரத் தகவல் அனுப்பினர். காலை 8:20 மணிக்குத் தரையிறங்கவிருந்த விமானத்துக்காக, வெடிகுண்டு நிபுணர்கள் தடம் எண் 30 பகுதிக்குச் சென்று தயார் நிலையில் இருந்தனர்.
விமானம் தரையிறங்கியதும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி விமானத்தை முழுமையாகச் சோதனையிட்டனர். அதோடு, விமானத்தில் வந்த 286 பயணிகளையும் தீவிரமாகப் பரிசோதித்தனர். ஆனால், விமானத்திலோ அல்லது பயணிகள் யாரிடமோ சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் இல்லை. இதனால், இது வழக்கமான வெடிகுண்டுப் புரளிதான் என்று உறுதி செய்யப்பட்டது.
வெடிகுண்டுச் சோதனை முடிந்து, விமான நிலையத்தில் நிலவிய பரபரப்பு ஓய்ந்து அமைதி ஏற்பட்டது. வழக்கமாக 10 மணிக்குச் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் செல்லும் இந்த விமானம், சோதனை காரணமாகச் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாகி, இன்று காலை 10:15 மணிக்கு 250 பயணிகளுடன் மீண்டும் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றது.
இந்தச் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்துச் சென்னை மாநகரச் சைபர் கிரைம் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மிரட்டல் விடுத்த மின்னஞ்சலின் மூலத்தைக் கண்டறியும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
