காதலித்து ஏமாற்றிய மருத்துவ கல்லூரி மாணவி! பழிவாங்க இளைஞர் எடுத்த விநோத முடிவு.. அரண்டு போன போலீஸ்

சென்னை:

தன்னை காதலித்து ஏமாற்றிய கல்லூரி மாணவியைப் பழிவாங்க இளைஞர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி மருத்துவம் பயின்று வரும் ருத்ரேஷ் உட்பட 2 மாணவர்களின் லேப்டாப்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடப்பட்டது.

இது குறித்து ருத்ரேஷ் அளித்த புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி

இதனையடுத்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இருந்த அனைத்து சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் லேப்டாப்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து லேப்டாப்பை திருடி செல்லும் நபர் குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிசிடிவி காட்சி

தனிப்படை போலீசார் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் ரோந்து பணியில் இருந்த போது அங்குச் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 25) என தெரியவந்தது. மேலும், லேப்டாப் திருட்டில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகளில் பதிவான நபரின் உருவமும், பிடிபட்ட நபரின் உருவமும் ஒற்றுமையாக இருந்ததால் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

திடுக் தகவல்கள்

அதில் பிடிபட்ட நபர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், இவருக்குப் பெற்றோர் இல்லை என்பதும் தெரிய வந்தது. டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.ஏ பொருளாதாரம் படித்துள்ள இவர், தொலைதூர கல்வி மூலமாக பி.எல் படித்ததும் தெரியவந்தது. தனிப்படை போலீசார் அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இதைக் கேட்டு போலீசாரே செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.

அட்டவணை போட்டு திருட்டு

அதாவது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்தும் பயின்ற பெண் ஒருவரைத் தமிழ்ச்செல்வன் காதலித்து வந்துள்ளார். இருப்பினும், அப்பெண் ஏமாற்றியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன் பழிவாங்க வினோதமான வழியைத் தேர்வு செய்துள்ளார். அதாவது நாடு முழுவதும் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளுக்குத் தனியாக அட்டவணை போட்டு ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று தினமும் சென்று இரண்டு லேப்டாப்கள் வீதம் டார்கெட் செய்து திருடி வருகிறார்.

கைது

மேலும், திருடிய லேப்டாப்களை பழைய பொருட்கள் விற்பனை செய்யும் வலைத்தளத்தில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவரை கைது செய்த போலீசார், செம்மஞ்சேரி பகுதியில் அவர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று சோதனை செய்தனர். அங்கு அவர் ஏற்கனவே திருடி வைத்திருந்த 31 லேப்டாப்களை பறிமுதல் செய்தனர்.

லேப்டாப்

தமிழ்ச்செல்வன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டதைப் போல அங்கிருந்த காலண்டரில் தினமும் ஒரு கல்லூரி எனக் கல்லூரியின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக அங்கிருந்த லேப்டாப்களை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

                     – Vighnesh Kumar

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com