கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர்கள் ஜெகதீஷ்(34), கார்த்திகா(21) தம்பதி. இவர்களுக்கு சஞ்சனா (3) சரண்(1) என 2 குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சரண் திடீரென எலி பேஸ்ட் சாப்பிட்டு மயக்கமடைந்ததாக தாய் கார்த்திகா கூலி வேலைக்கு சென்றிருந்த கணவருக்கு தகவலளித்துள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த ஜெகதீஷ் குழந்தை சரணை மார்த்தாண்டம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் போலீசார் குழந்தை சரணின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்க அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அதாவது தாய் கார்த்திகாவின் செல்போனில் வந்த சென்ற அழைப்புகள் அழிக்கபட்டிருந்தன. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் மாரயபுரம் பகுதியை சேர்ந்த சுனில் என்பவருடன் கார்த்திகா அதிகநேரம் செல்போனில் பேசி பின்பு நம்பரை டெலிட் செய்தது தெரியவந்தது.
பின்னர் சுனிலை கைது செய்து விசாரணை நடத்திய போது கார்திகாவிற்கு திருமணமாகி குழந்தை இருப்பது தெரியாமல் பழகியதாகவும் அந்த தகவலை தெரிந்ததும் பேசுவதை நிறுத்தியதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் சுனில் மீது இருந்த காதலில் முழ்கிய கார்த்திகா தனது இரண்டு குழந்தைகளை கொன்றால் தன்னை ஏற்றுகொள்வான் என்று நினைத்து சேமியா உப்புமாவில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த உள்ளார்.
இதில் குழந்தை சரண் உயிரிழந்த நிலையில், சஞ்சனா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.