சங்கத் தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைத்து ஆல்பம் வெளியிட வேண்டும் என இளையராஜாவுக்குக் கோரிக்கை!
இசைக்கலைஞர்களுக்கு இளையராஜா பெயரில் விருது; ஹார்மோனியப் பெட்டி நினைவுப் பரிசு வழங்கிக் கௌரவித்தார்!
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கப்பட வேண்டும் எனத் தமிழக மக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
விழாவில் பேசிய முதலமைச்சர், "ராஜாவின் பாடல்களை முணுமுணுக்காதவர்களே கிடையாது" என்று புகழாரம் சூட்டினார். மேலும், சங்கத் தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைத்து, அதனை ஓர் ஆல்பமாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இளையராஜா பெயரில் விருது
முதலமைச்சர் ஸ்டாலின் மேலும் பேசுகையில், இது இசைஞானி இளையராஜாவுக்கான பாராட்டு விழா மட்டுமல்ல, அவருக்கு நாமெல்லாம் சேர்ந்து நன்றி தெரிவிக்கும் விழா. இந்தத் தருணத்தில், இனி ஆண்டுதோறும் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பில் இசைஞானி இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும் என அறிவித்தார்.
இசைஞானி என்பது பட்டமல்ல, பெயராகவே மாறிவிட்டது. வரலாற்றில் எத்தனையோ மாமனிதர்கள் ஒரே பிறந்தநாளைக் கொண்டிருப்பர். ஆனால், யாரும் யாருக்காகவும் தன் பிறந்தநாளை மாற்றிக் கொண்டதில்லை. ஆனால், இசைஞானி இளையராஜா, கலைஞருக்காகத் தன் பிறந்தநாளை மாற்றிக் கொண்டார். அந்த வகையில், உள்ளத்திலும் ராஜாவாக உயர்ந்துள்ளார்," என்று கூறி, இளையராஜாவின் பெருந்தன்மையைப் பாராட்டினார்.
எப்போதும் நீங்கள் ராஜாதான்
நேற்று இல்லை, நாளை இல்லை, எப்போதும் நீங்கள் ராஜாதான், என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசிய முதலமைச்சர், விழாவின் நிறைவில், இளையராஜாவுக்கு ஹார்மோனியப் பெட்டி நினைவுப் பரிசு ஒன்றை வழங்கிக் கௌரவித்தார். இளையராஜா ஹார்மோனியப் பெட்டியில் இசையமைப்பதைப் போன்ற வடிவில் அந்தப் பரிசு அமைந்திருந்தது.
முதலமைச்சரின் கோரிக்கை
தமிழின் தொன்மையையும் இசையையும் இணைக்கும் விதமாக, சங்கத் தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைத்து ஓர் ஆல்பமாக வெளியிட வேண்டும் என்றும் இளையராஜாவுக்குக் கோரிக்கை விடுத்தார்.
இறுதியாக, இளையராஜாவுக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனத் தமிழ்நாட்டு மக்கள் சார்பாகக் கேட்டுக்கொண்ட ஸ்டாலின், ஹார்மோனியப் பெட்டியில் இசையமைப்பது போன்ற நினைவுப்பரிசை வழங்கி இளையராஜாவைக் கௌரவித்தார்.
