“நம்பிக்கைத் துரோகங்களைச் சந்தித்தேன்; கணேசமூர்த்தி மரணத்திலும் பழி போட முயன்றனர்” - உருக்கமான வரலாற்றுப் பதிவுகள்!
ஈரோடு மேட்டூர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற மதிமுக மேற்கு மண்டல தேர்தல் நிதி அளிப்பு விழாவில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு தனது அரசியல் கடந்த கால கசப்பான மற்றும் பெருமைமிக்க நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
துரோகங்களும் குற்றச்சாட்டுகளும்:
1994-ல் திமுகவிலிருந்து நான் வெளியேற்றப்பட்ட போது, எனது தலைவரைக் கொல்லத் திட்டமிட்டேன் என்பது உட்படப் பல கொடூரமான குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்தப்பட்டன. தொண்டையில் நீர்க்கட்டி அறுவை சிகிச்சை செய்தபோதும், ராணிப்பேட்டையில் நான் தாக்கப்பட்ட போதும் அறிவாலயத்தில் இருந்தவர்கள் யாரும் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஈரோடு கணேசமூர்த்தியின் மரணத்திலும் என் மீது பழி சுமத்தப்பட்டது; ஆனால் அவரது குடும்பத்தினர் அதனை நம்பவில்லை.
வரலாற்றுச் சாதனைகள்:
ஜனாதிபதி பதவிக்கு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பெயரை வாஜ்பாயிடம் முதன்முதலில் பரிந்துரைத்தது நான்தான். ராஜபக்ஷே இந்தியா வந்தபோது, இந்துத்துவ சக்திகளை எதிர்த்து வட மாநிலமான சாஞ்சியில் துணிச்சலாகப் போராட்டம் நடத்திய ஒரே கட்சி மதிமுகதான். 18 மாதங்கள் சிறையில் இருந்தபோதும், பலமுறை தாக்கப்பட்டபோதும் தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கத் தொடர்ந்து போராடினோம்.
திமுக கூட்டணி மற்றும் நூல்கள்:
நாங்கள் திமுக கூட்டணியில் இணைந்ததிலிருந்து எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. எங்களைப் போலக் கூட்டணி தர்மத்தை மதிக்கும் கட்சி வேறெதுவும் இல்லை. நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய 1300 உரைகளை 5 தொகுதிகளாக ராகுல் காந்தியிடம் வழங்கினேன். இதற்குத் தமிழக முதல்வர் முன்னுரை வழங்கியுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எனது 1994-க்கு பிந்தைய வாழ்க்கை வரலாற்றைச் சுயசரிதையாக எழுதத் திட்டமிட்டுள்ளேன்.
.png)