சேலம்:
தம்மம்பட்டி வனத்துறையினர் தெடாவூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆத்தூரில் இருந்து தெடாவூர் நோக்கி வேகமாக வந்த வேனை நிறுத்த முயன்றனர்.
வேன் டிரைவர் அதை வேகமாக செலுத்தினார். சந்தேகம் அடைந்த வனத்துறையினர் வேனை பின்னால் துரத்தினர். உடனே வேனை ஓட்டி வந்தவர் வேனை காட்டுப்பகுதியில் நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.

அந்த வேனில் சோதனையிட்டபோது அதில் 40 பண்டல்களில் குட்கா போதைப்பொருட்கள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும்.
இதை தொடர்ந்து வேனுடன் குட்காவை கைப்பற்றிய வனத்துறையினர் கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் மர்ம நபர்கள் இரவு நேர ஊரடங்கை பயன்படுத்தி குட்கா கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து தப்பி ஓடிய வேன் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள். வேனை துரத்தி சென்று மடக்கிய வனத்துறையினருக்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.