தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகள், செம்மொழி தமிழ் ஆராய்ச்சி மைய வளாக கட்டடத்தையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்துவைத்தார்.
தமிழகத்தின் அரியலூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகை மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. மத்திய அரசு வழங்கிய 2 ஆயிரத்து 145 கோடி ரூபாயுடன், ஒட்டுமொத்தமாக 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த கல்லூரிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் ஏற்கனவே 37 அரசு மருத்துவக்கல்லூரிகள் மூலம் 5 ஆயிரத்து 125 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன. தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளால், ஆயிரத்து 450 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும். புதிய மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் மோடி, விருதுநகரில் பிரமாண்ட விழாவில் பங்கேற்று தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலால், மோடியின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு, பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடியே 11 மருத்துவ கல்லூரிகளை காணொலி மூலம் திறந்து திறந்துவைத்தார். இதனுடன் மத்திய அரசு நிறுவனமான செம்மொழி தமிழ் ஆராய்ச்சி மைய வளாக கட்டடத்தையும் திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வணக்கம், அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். தை பிறந்தால் வழி பிறக்கும். இன்று நாம் இரண்டு முக்கிய நிகழ்வுகளாக சந்தித்துள்ளோம். மருத்துவக் கல்லூரிகள், செம்மொழி தமிழ் ஆராய்ச்சி மைய வளாக கட்டடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
நாட்டில், 2014ல் நாட்டில் 387 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருந்தன. கடந்த 7 ஆண்டுகளில் இது 596 ஆக உயர்ந்துள்ளது. இது54 சதவீதம் உயர்வாகும். 2014ல் நாட்டில் 82 ஆயிரம் மருத்துவ இடங்கள் (இளநிலை மற்றும் முதுநிலை சேர்த்து) இருந்தன. கடந்த 7 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1,48,000 ஆக உயர்ந்துள்ளது. இது 80 சதவீதம் உயர்வு ஆகும். 2014ல் நாட்டில் 7 எய்ம்ஸ் தான் இருந்தது. தற்போது இது 22 ஆக உயர்ந்துள்ளது என்று பேசினார். ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.