
<p><span dir="auto">ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியின் கருத்துக்களுக்கு கடும் போக்கு கொண்ட அரசியல் பிரிவுகளிடமிருந்து எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா உடனான முன்மொழியப்பட்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானில் எதிர்ப்பு பெருகிவருகிறது. வடகிழக்கு நகரமான மஷ்ஹத்தில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஈரான் அரசு வாஷிங்டனுக்கு அதிகப்படியான சலுகைகளை வழங்குவதாகவும், நாட்டின் மூலோபாய நலன்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினர்.</span></p>
<h2><span dir="auto">மஷ்ஹத் நகரில் வெடித்த போராட்டம்</span></h2>
<p><span dir="auto">மஷ்ஹத்தில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்திற்கு வெளியே டஜன் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி, அராக்சியின் ராஜினாமாவை கோரி முழக்கங்களை எழுப்பினர். ஈரானிய செய்தி நிறுவனமான ஃபார்ஸ் பகிர்ந்த காணொளிகளில், கருப்பு நிற முக்காடு அணிந்த பெண்கள், வெளியுறவு அமைச்சரை கண்டித்தவாறு சிவப்பு மற்றும் கருப்புக் கொடிகளை காட்டினர். முன்மொழியப்பட்ட இந்த ஒப்பந்தம், ஈரானின் பிராந்திய அந்தஸ்தை பலவீனப்படுத்தும் என்றும், முக்கிய தேசிய நலன்களை பாதிக்கும் என்றும் போராட்டக்காரர்கள் கூறினர்.</span></p>
<p><span dir="auto">ஒப்பந்தத்தின் தற்போதைய நிபந்தனைகள் அமெரிக்காவிற்கு சாதகமாக இருப்பதாகவும், உலகின் மிக முக்கியமான மூலோபாய கடல்வழிப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான டெஹ்ரானின் செல்வாக்கை குறைக்கக்கூடும் என்றும் போராட்ட குழுக்கள் வாதிடுகின்றன. இந்த நீர்வழிப்பாதை, ஈரானின் பிராந்திய செல்வாக்கு மற்றும் தடுப்பு உத்தியின் ஒரு முக்கிய தூணாக நீண்ட காலமாக பார்க்கப்பட்டு வருகிறது.</span></p>
<h2><span dir="auto">எதிர்ப்பைத் தூண்டிய அரக்சியின் நேர்காணல்</span></h2>
<p><span dir="auto">ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கைகளுக்குப் பிறகு விதிக்கப்பட்ட அமெரிக்கக் கடற்படை முற்றுகையை நீக்குவதற்கான விதிகள், முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தில் அடங்கியுள்ளன என்று அராக்சி ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்ததை அடுத்து, இந்த சர்ச்சை தீவிரமடைந்தது. அந்த நேர்காணலின் போது, அந்த நீர்வழியின் நிர்வாகம் மாற்றமின்றி இருக்காது என்று அவர் குறிப்பிட்டதோடு, அது ஈரானின் பாதுகாப்பு நிலைப்பாட்டில் தொடர்ந்து ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்றும் வலியுறுத்தினார்.</span></p>
<p><span dir="auto">இதனிடையே, டெஹ்ரானில் இருந்தும் கூடுதல் போராட்டங்கள் நடப்பது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. சமூக ஊடகங்களில் பரவிவரும் சரிபார்க்கப்படாத காணொளிகளில், வெளியுறவு அமைச்சகத் தலைமையகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் அராக்சியின் ராஜினாமாவைக் கோரி நிற்பது தெரிவதாகத் தெரிகிறது. மேலும், பேச்சுவார்த்தைகளில் சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் வகித்த முக்கிய பங்கைக் காரணம் காட்டி, அவர் பதவி விலக வேண்டும் என்றும் சில போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</span></p>
<p><span dir="auto"><iframe title="Raghava Lawrence Politics | ”தற்குறி இல்ல அம்புக்குறி! ரஜினி ஆசீர்வாதத்தோட...”லாரன்ஸ் சொன்ன சீக்ரெட்" src="https://www.youtube.com/embed/SgBwhTg3e2U" width="756" height="425" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></span></p>
<h2><span dir="auto">“இன்று ஒப்பந்தம் ஏற்படுவது சந்தேகமே“</span></h2>
<p><span dir="auto">இதற்கிடையே, ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான காலக்கெடு குறித்து நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள், இந்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமையன்றே முடிவுக்கு வரக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், மின்னணு முறையில் கையெழுத்திடும் விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஈரான் அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.</span></p>
<p><span dir="auto">வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகெயி, ஒரு உடன்பாடு உடனடியாக எட்டப்படும் என்ற யூகங்களை நிராகரித்ததோடு, அது "நாளை"(ஞாயிறு) நடக்காது என்றும் நேற்று கூறினார். இருப்பினும், பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாகவும், வரும் நாட்களில் ஒரு இறுதி உடன்பாடு எட்டப்படலாம் என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.</span></p>
<p> </p>
<p><span dir="auto"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/know-who-should-not-drink-coconut-water-health-risks-and-side-effects-263759" width="631" height="381" scrolling="no"></iframe></span></p>
Source: Read Full Article