ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை ஆரம்பம்: தேர்தல் நேரத்தில் முன்கூட்டியே முடிகிறதா தேர்வுகள்? - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் ஒருபுறம் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பள்ளி மாணவர்களின் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணையைத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை இன்று அதிரடியாக வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்வுகள் தள்ளிப்போகுமா அல்லது முன்கூட்டியே நடக்குமா என்ற குழப்பத்திற்கு இந்த அட்டவணை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதன்படி, ஏப்ரல் 16-ஆம் தேதியுடன் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நிறைவடைந்து, ஏப்ரல் 17 முதல் ஜாலியான கோடை விடுமுறை தொடங்கவுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து வகையான பள்ளிகளுக்கும் இந்த அட்டவணை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வகுப்பு வாரியாகத் தேர்வுகள் தொடங்கும் தேதிகள் மாறுபட்டாலும், அனைத்து மாணவர்களுக்கும் ஏப்ரல் 16-ஆம் தேதியுடன் 'பினிஷிங் டச்' கொடுக்கப்படவுள்ளது. குறிப்பாக, 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதியே தேர்வுகள் தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குச் சற்று தாமதமாகத் தேர்வுகள் தொடங்குகின்றன.
அதன்படி, 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான குட்டீஸ்களுக்கு ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதிக்குள் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும். "தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டியிருப்பதாலும், பள்ளிகள் வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட வேண்டியிருப்பதாலும், ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் அனைத்துத் தேர்வுகளையும் முடிக்க 'மாஸ்டர் பிளான்' போடப்பட்டுள்ளது," எனப் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 16-ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைவதால், ஏப்ரல் 17 முதல் மாணவர்கள் தங்களது கோடை விடுமுறையைக் கொண்டாடத் தொடங்கலாம். தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் இந்த அட்டவணைத் தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு (2026-2027) ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், தேர்தல் முடிவுகள் மற்றும் புதிய அரசு அமைவதைப் பொறுத்துத் தொடக்கத் தேதியில் மாற்றம் இருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த அறிவிப்பால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது கோடைக்காலச் சுற்றுலா மற்றும் சொந்த ஊர் பயணங்களுக்கு இப்போதே 'டிக்கெட்' முன்பதிவு செய்யத் தயாராகி வருகின்றனர். அதே சமயம், ஆசிரியர்கள் ஏப்ரல் 16-க்குப் பிறகு முழுவீச்சில் தேர்தல் பணிகளில் களமிறங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்பே தேர்வுகள் முடிவடைவது, மாணவர்களுக்கு ஒரு மிகப்பெரிய 'ரிலீஃப்' ஆகப் பார்க்கப்படுகிறது.
