"கிளிக் செய்வதற்கு முன் சிந்திக்கவும்!" – தேர்தல் நேர சைபர் மோசடிகளுக்கு எதிராகக் காவல்துறை அதிரடி விழிப்புணர்வு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பப்படும் தவறான தகவல்கள் மற்றும் சைபர் அச்சுறுத்தல்களைத் தடுக்கச் சென்னை இணையவழி குற்றப்பிரிவு (Cyber Crime) தலைமையகம் அதிரடி விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்கும் நோக்கில், பொதுமக்களுக்கான பிரத்யேக விழிப்புணர்வு வீடியோ இன்று வெளியிடப்பட்டது.
இணையவழி குற்றப்பிரிவு தலைமை இயக்குநர் டாக்டர் சந்தீப் மித்தல் இந்த வீடியோவை வெளியிட்டார். இந்நிகழ்வில் காவல் கண்காணிப்பாளர்கள் ஷஹ்நாஸ் மற்றும் மீனாட்சி ஆகியோர் பங்கேற்றனர். மேலும், இணையவழி குற்றப்பிரிவு மற்றும் HDFC வங்கி இணைந்து தயாரித்துள்ள "எந்தத் தேர்தல் செய்தியையும் கிளிக் செய்வதற்கு முன் சிந்தியுங்கள்" என்ற விழிப்புணர்வு போஸ்டரை இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஸ்ருதாஞ்ஜய் நாராயணன் வெளியிட்டார்.
விழிப்புணர்வு வீடியோவின் முக்கிய அம்சங்கள்:
புதிய அச்சுறுத்தல்கள்:
பிஷிங் லிங்குகள் (Phishing links), தவறான தகவல் பரவல் மற்றும் சமீபகாலமாகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள டீப்ஃபேக் (Deepfake) வீடியோக்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
மோசடி செய்திகள்:
தேர்தல் தொடர்பான பரிசு அறிவிப்புகள், அவசரத் தகவல் போலத் தோன்றும் போலி லிங்குகள் ஆகியவற்றைக் கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிறப்புத் தேர்தல் பிரிவு:
தவறான தகவல் பரவல் மற்றும் வெறுப்புப் பேச்சுகளைக் கண்காணிக்க இணையவழி குற்றப்பிரிவில் 24 மணி நேரமும் செயல்படும் 'சிறப்புத் தேர்தல் பிரிவு' அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான தாரக மந்திரம்:
"கிளிக் செய்வதற்கு முன் சிந்திக்கவும் – பகிர்வதற்கு முன் சரிபார்க்கவும்"
செய்ய வேண்டியவை:
தேர்தல் தகவல்களை எப்போதும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மட்டுமே சரிபார்க்கவும்.
உங்கள் OTP மற்றும் வங்கி விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம்.
சந்தேகத்திற்குரிய பதிவுகள் குறித்து உடனடியாகப் புகாரளிக்கவும்.
தவிர்க்க வேண்டியவை:
உறுதி செய்யப்படாத மற்றும் உணர்ச்சியைத் தூண்டும் பதிவுகளைப் பகிர வேண்டாம்.
போலிச் செய்திகளை உருவாக்குவதோ அல்லது பரப்புவதோ சட்டப்படி குற்றமாகும்.
ஜனநாயகத் திருவிழாவின் நம்பகத்தன்மையைச் சிதைக்கும் சைபர் குற்றவாளிகளிடமிருந்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என இணையவழி குற்றப்பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
.jpg)