மகளிர் தின ஸ்பெஷல்: சாடிவயல் வனப்பகுதியில் புத்துணர்வுப் பயணம் - "மங்கையரால் முடியாதது எதுவுமில்லை!"
கோவை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் வலிமையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று ஒரு 'அட்வென்ச்சர்' பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கோவை குற்றாலம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான சாடிவயல் வனப்பகுதியில், எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழகப் பெண்மணி முத்தமிழ் செல்வி மற்றும் பிரபல பெண் தொழில்முனைவோர் விளக்குக்கடை ராஜலட்சுமி ஆகியோருடன் இணைந்து அவர் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டார்.
இயற்கையின் மடியில் நடந்த இந்தச் சாகசப் பயணம், அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ஒரு 'புத்துணர்வு' அளிப்பதாக அமைந்திருந்தது. இது குறித்த புகைப்படங்களை வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட, அது இப்போது சமூக வலைதளங்களில் 'ஹாட்' செய்தியாக மாறியுள்ளது.
இந்த மலையேற்றத்தின் போது, உலகின் உச்சாணிக் கொம்பான எவரெஸ்ட்டை வென்ற முத்தமிழ் செல்வி, தனது கடினமான அனுபவங்களையும், சாதனைகளையும் வானதி சீனிவாசனுடன் பகிர்ந்து கொண்டார்.
"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்" என்ற வாக்கிற்கு இணங்க, எவரெஸ்ட் முதல் சாடிவயல் வரை பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை இந்தத் 'டீம்' நிரூபித்துக் காட்டியுள்ளது. மலையேற்றப் பயிற்சியோடு மட்டும் நிற்காமல், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் பெண்களுக்கு இருக்கும் பங்கு மற்றும் தற்போதைய சூழலில் காடுகளைக் காக்க வேண்டிய அவசியம் குறித்தும் இவர்கள் விரிவாக விவாதித்தனர். மகளிர் தின கொண்டாட்டத்திற்கு ஒரு 'ரியல்' அர்த்தம் கொடுக்கும் வகையில் இந்த முயற்சி அமைந்திருந்தது.
இயற்கையோடு இணைந்த இந்தப் பயணம் குறித்து பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், "மனதிற்கு மிகுந்த உற்சாகத்தையும் புத்துணர்வையும் அளித்தது" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஒரு சட்டமன்ற உறுப்பினராகத் தொகுதிப் பணிகளில் பிஸியாக இருந்தாலும், மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனைப் பெண்களுடன் இணைந்து அவர் மேற்கொண்ட இந்த 'டிரெக்கிங்', பல இளம் பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய 'இன்ஸ்பிரேஷன்' ஆக அமைந்துள்ளது. "மங்கையரால் முடியாதது எதுவும் இல்லை" என்பதைச் சொல்லால் மட்டும் சொல்லாமல், செயலிலும் காட்டிய வானதி சீனிவாசன் மற்றும் குழுவினரின் இந்தச் சாகசம், கோவை மக்களிடையே ஒரு 'பாசிட்டிவ்' அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
in
அரசியல்