பாஜக கூட்டணி ஸ்கிரீன் பிளே முதல் மாவட்டச் செயலாளர்கள் மீட்டிங் வரை: திமுக - பாஜக என இருதரப்பும் நடத்தும் நிழல் யுத்தம் அம்பலம்!
சென்னை: தமிழக அரசியல் சதுரங்க ஆட்டத்தில் 'தளபதி' விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தற்போது மையப்புள்ளியாக மாறியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக விஜய் டெல்லிக்கு விசாரணைக்குச் சென்றது முதல், அங்கு அவர் ஏழு மணி நேர விசாரணைக்குப் பிறகு புன்னகையுடன் வெளியே வந்தது வரை ஒவ்வொன்றும் ஒரு 'சஸ்பென்ஸ் த்ரில்லர்' படத்தைப் போலவே அரங்கேறி வருகின்றன. தவெக-வினர் பாஜக மற்றும் அதிமுக-வுடன் கூட்டணி வைக்கப்போவதாகப் பரவிய செய்திகளுக்கு அக்கட்சி அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்திருந்தாலும், களத்தில் நிலவும் குழப்பங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. குறிப்பாக, விஜய் டெல்லிக்குச் செல்வதற்குச் சரியாக ஒரு நாளைக்கு முன்னதாக வெளியான ஒரு 'மர்ம' கருத்துக் கணிப்பு, இப்போது தமிழக அரசியலில் 'டாப் ஆஃப் தி டவுன்' ஆக மாறியுள்ளது.
விஜய் டெல்லிக்குப் புறப்படுவதற்கு முன்னதாக, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மாவட்டச் செயலாளர்களுடன் அவசர அவசரமாகக் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த 'கான்ஃபிடன்ஷியல்' கூட்டத்தில், "தேர்தலில் கூட்டணி வைக்கலாமா?" என அவர் கருத்துக் கேட்டதாகவும், அதற்கு மாவட்டச் செயலாளர்கள் தலைகீழான பதில்களை வழங்கியதாகவும் 'லீக்' ஆன தகவல்கள் காட்டுத்தீயாகப் பரவின. ஆனால், தவெக மேல்மட்ட நிர்வாகிகள் தரப்போ, "மாவட்டங்களில் நிலவும் ஒருங்கிணைப்புச் சிக்கல்களைச் சரிசெய்யவே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது; கூட்டணிப் பேச்சுவார்த்தை என்பது திமுக தரப்பு பரப்பும் 'ஸ்பின்' பாலிடிக்ஸ்," என அடித்துக் கூறுகின்றனர்.
இந்த பரபரப்புகளுக்கு இடையே வெளியான அந்த ரகசியக் கருத்துக் கணிப்புதான் இப்போது பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்தச் சர்வேயில், விஜய் அடுத்த முதல்வர் ரேஸில் முந்துவதாகவும், அவருக்கு மக்களிடையே 'வேவ்' இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இது விஜய்யைத் தூண்டிவிடும் ஒரு உத்தியாகவே பார்க்கப்படுகிறது. அதாவது, "நமக்கே இவ்வளவு செல்வாக்கு இருக்கும்போது, நாம் ஏன் பாஜக அல்லது அதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து நமது 'இமேஜை' கெடுத்துக்கொள்ள வேண்டும்?" என விஜய்யை யோசிக்க வைப்பதற்காகவே இந்தச் சர்வே வெளியிடப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் 'பிட்' அடிக்கின்றனர்.
மறுபுறம், பாஜக-வுக்குள்ளேயே இருக்கும் ஒரு பிரிவினர், எடப்பாடி பழனிசாமி - பாஜக கூட்டணி மீண்டும் அமைவதை விரும்பவில்லை என்றும், அவர்கள் தங்களது 'பிளான் பி' திட்டத்தின் கீழ், விஜய் தனித்துப் போட்டியிட்டு என்டிஏ-வின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என மறைமுகமாக வேலை செய்வதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. "விஜய் தனித்து நின்றால் அது அவருக்குப் பலம்" என்று இந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட வைத்ததன் பின்னணியில் டெல்லி மேலிடத்தின் ஆசி பெற்ற சில தலைவர்கள் இருக்கலாம் என்ற 'திடுக்கிடும்' தகவலும் உலா வருகிறது.
விஜய்யின் தொலைநோக்குத் திட்டம் 2031 தேர்தலை நோக்கியே இருப்பதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "இப்போது களத்தில் இருக்கும் பல 'சீனியர்'கள் அடுத்த தேர்தலில் இருக்க மாட்டார்கள்; அப்போது களத்தில் விஜய்யும் உதயநிதியும் மட்டுமே மோதுவார்கள். அதுதான் உண்மையான பலப்பரீட்சை," என்பதுதான் விஜய்யின் 'மாஸ்டர் பிளான்' என்கிறார்கள். இதற்காகவே, தற்போது வீழ்ச்சியடைந்து வரும் அதிமுக-வுக்கு 'ஆக்சிஜன்' கொடுத்து மீண்டும் உயிர்ப்பிக்க விஜய் விரும்பவில்லை என்றும், தனது பலத்தைத் தனித்துக் காட்டிவிட்டு அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்க அவர் காத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. டெல்லி விசாரணையை ஒரு 'உத்தியாக' பயன்படுத்திக் கொண்டு, தேர்தலுக்கு முன் ஒரு மாபெரும் அரசியல் திருப்பத்தைச் செய்ய விஜய் காத்திருக்கிறார். அடுத்த ஒரு மாத காலத்திற்கு தமிழக அரசியலில் விஜய் என்ற கதாநாயகனை வைத்து இன்னும் எத்தனை 'ட்விஸ்ட்'கள் வரப்போகின்றன என்பது மில்லியன் டாலர் கேள்வி!
