சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் தற்போது அதிமுக-வின் ராஜமுத்து சிட்டிங் எம்.எல்.ஏ-வாக உள்ளார். இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க திமுக துடித்துக் கொண்டிருக்கும் வேளையில், கட்சிக்குள்ளேயே நடக்கும் ‘குஸ்தி’ பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது. வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்தி மலர்விழி, மகன் பிரபு, மருமகன் தருண் மற்றும் கட்சி நிர்வாகிகள் சுரேஷ்குமார், வெண்ணிலா சேகர் என மொத்தம் ஐந்து பேர் விருப்ப மனு அளித்து, தற்போது சென்னையில் முகாமிட்டு ‘பவர்ஃபுல்’ லாபி செய்து வருகின்றனர்.
இது குறித்து சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் குமுறுகையில், “வீரபாண்டி ஆறுமுகம் ஐயா காலத்தில் கோட்டையாக இருந்த இந்தத் தொகுதி, இன்று வாரிசுச் சண்டையால் பலவீனமாகிவிட்டது. ஒருவருக்கு ‘சீட்’ கொடுத்தால் மற்றவர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள் என்பது ‘ஓப்பன் சீக்ரெட்’. இவர்களின் ஈகோ மோதலால் தொகுதி மீண்டும் அதிமுக-வுக்கே தாரை வார்த்து கொடுக்கப்படுமோ என்ற பயம் எங்களுக்கு இருக்கிறது. இவர்களைத் தவிர்த்துவிட்டு பொதுவான ஒரு ‘மாஸ்’ வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே வெற்றி சாத்தியம்” என ஆவேசமாகத் தெரிவித்தனர்.
இந்தக் குடும்பப் பூசலால் சேலம் மாவட்ட திமுக-வே இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து கிடப்பது, மற்ற தொகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. “வாரிசுகளுக்குள் ஒற்றுமை இல்லாதது தான் திமுக-வுக்குப் பின்னடைவு” எனச் சொந்தக் கட்சியினரே புலம்புவது எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக மாறியுள்ளது. இறுதி நேரத்தில் ஸ்டாலின் எடுக்கப்போகும் அந்த ‘அதிரடி’ முடிவு என்னவாக இருக்கும்? வாரிசுகளுக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது ‘வெயிட்டிங் லிஸ்டில்’ இருப்பவர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
