
<p>மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இன்று நடந்து வரும் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.</p>
<h2>காப்பாற்றிய கேப்டன் - துணை கேப்டன்:</h2>
<p>ஆட்டத்தை தொடங்கிய ஷபாலி வர்மா - ஸ்மிரிதி மந்தனா நிதானமாக ஆடத்தொடங்கினர். ஷபாலி வர்மா 6 ரன்னில் அவுட்டாக அடுத்து வந்த ஜெமிமா 1 ரன்னில் அவுட்டானார். 18 ரன்னில் 2 விக்கெட் விழுந்த நிலையில், ஸ்மிரிதி மந்தனா - ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி ஒன்று சேர்ந்தது. </p>
<p>கேப்டன் - துணை கேப்டன் இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடினர். மைதானம் சற்று பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க இருவரும் பொறுப்புடன் ஆடினர். ஏதுவான பந்துகளை மட்டுமே பவுண்டரிக்கு விளாசினர். ஹர்மன்ப்ரீத் நிதானமாக ஆட ஸ்மிரிதி மந்தனா சற்று அதிரடி காட்டினார். அவர் அரைசதம் விளாசி அசத்தினார்.</p>
<h2><strong>கடைசியில் கலக்கிய ரிச்சா கோஷ்:</strong></h2>
<p>அதிரடி காட்டிய ஸ்மிரிதி மந்தனா ரமீன் ஷமீம் பந்தில் 44 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 68 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த பார்தி 1 ரன்னில் அவுட்டாக சில நிமிடங்களில் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 35 பந்துகளில் 4 பவுண்டரி 36 ரன்கள் எடுத்து அவுட்டானார்.</p>
<p>123 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி இழந்து தடுமாறியபோது களமிறங்கிய ரிச்சா கோஷ் அதிரடியாக ஆடினார். அவர் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசினார். அவர் 17 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்து அவுட்டாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்களை எடுத்தது. </p>
<h2><strong>வெற்றி பெறுமா பாகிஸ்தான்?</strong></h2>
<p>தீப்தி ஷர்மா 12 ரன்களுடனும், ஸ்ரேயங்கா பாட்டீல் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணியின் ஷாதியா, ஃபாத்திமா தலா 2 விக்கெட்டுகளையும், தஸ்மியா, ரமீன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் ஆடி வருகிறது. </p>
<p> </p>
Source: Read Full Article