
<h3><strong>கலைஞர் 103 - வது பிறந்த நாள்</strong></h3>
<p>முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103 - வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் திரைப்பாடல் ஆசிரியர் கவிஞர் வைரமுத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.</p>
<h3><strong>இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது ;</strong></h3>
<p>ஒரு சமூகத்திற்கு மிக முக்கியமான பண்பு நன்றி மறவாத தன்மை. நன்றியை வைத்துத் தான் ஒரு சமூகத்தின் நாகரிகம் எடை போடப்படுகிறது. நேற்று அதற்கு விரோதமான செயல் தேவநேயப் பாவணர் நூலகத்தில் நிகழ்ந்தது என்று கேள்விப்பட்டு விக்கித்துப் போனேன்.</p>
<p>தேவநேய பாவாணர் நூலகத்தில் நடைபெற்ற ஒரு இலக்கிய விழாவில் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி நடைபெற்றது அரசு துறைக்கு ஆட்பட்ட அரங்கம்.</p>
<h3><strong>கலைஞர் படம் அகற்றியதற்கு என்ன காரணம் ?</strong></h3>
<p>அரங்கத்தில் பெரியார் , காமராஜர் , அண்ணா , எம்.ஜி.ஆர் , கலைஞர் அவர்களின் படங்களும் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அமைச்சர் வருவதற்கு முன்னால் கலைஞர் படம் மட்டும் அகற்றப்பட்டு விட்டது. இதை கேட்டு நான் வெந்து போனேன் நொந்து போனேன்.</p>
<p>கலைஞரின் படம் மட்டும் அகற்றப்பட்டதற்கு என்ன காரணம் ? இந்த அரசு கலைஞருக்கு விரோதமான அரசா ? இது அரசு செய்த அமைச்சர் செய்த காரியம் என்று நான் நினைக்கவில்லை. இதற்கு காரணம் அதிகாரிகளில் அச்சம் அதிகாரிகளின் சுய முடிவு அதிகாரிகளின் அறியாமை என்று நான் நினைக்கிறேன்.</p>
<p>இன்று முதல்வர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> , உதயநிதிக்கு விரோதியாக இருக்கலாம் ஸ்டாலினுக்கு விரோதி என்று நினைத்துக் கொள்ளலாம் ஆனால் கலைஞருக்கும் விரோதி என்று தன்னை ஒரு நாளும் நினைத்துக் கொள்ள மாட்டார் என்று நான் நம்புகிறேன்.</p>
<h3><strong>கலைஞர் இல்லாமல் தமிழ் உண்டா ?</strong></h3>
<p>முதலமைச்சர் நாற்காலி , முன்னவர்களால் செழுமையும் பெருமையும் படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பெருமை தான் இந்த நாற்காலிக்கு பெரிய வரலாற்றை கொடுத்துக் கொண்டுள்ளது. அரசு சொல்லாமல் எப்படி அதிகாரிகள் இவ்வாறு நடந்து கொள்ளலாம் ? விழா முடிந்ததும் கலைஞர் படம் மீண்டும் மாற்றப்பட்டதாக அறிகிறேன். கலைஞர் இல்லாமல் அந்த நூலகம் உண்டா ? கலைஞர் இல்லாமல் தமிழ் உண்டா ? தமிழனுக்கு ஒரு பெரிய பீடம் உண்டா ? செம்மொழி உண்டா ?</p>
<p>தற்பொழுதைய அரசு முன்னோர்களை போற்றும் அரசாக திகழ வேண்டும் என்பது என் வேண்டுகோள். தனிப்பட்ட கொள்கைகள் மாறுபாடுகள் வேறு அவைகள் எல்லாம் அரசியலில் கச்சா பொருட்கள்.</p>
<p>எதிரி என்று ஒருவனை தீர்மானித்துக் கொள்வதும் கொள்கை என்று ஒன்றை வகுத்துக் கொள்வதும் எதை நோக்கிய பயணம் என்று திட்டமிடுவதும் அரசியலின் அடிப்படை கச்சா பொருட்கள்.</p>
<p>ஆனால் எங்கள் முன்னோர்களை மதித்துக் கொண்டு தான் அச்செயல்கள் நடைபெற வேண்டும் என்பது எங்களைப் போன்ற தமிழ் அன்பர்களின் எண்ணம்.</p>
<p>நான் ஒரு கட்சிக்காரன் அல்ல. எந்த கட்சியிலும் உறுப்பினர் அல்ல ஆனால் தமிழின் உறுப்பினர் நான். தமிழ் வரலாற்றின் மாணவன் நான். தமிழ் பெருமக்களின் பிரதிநிதி நான். ஆதலால் நாங்கள் வருத்தப்படுமாறு எந்த செயலும் நிகழ்ந்து விடக் கூடாது என்று விரும்பி வருந்தி கேட்டுக் கொள்கிறேன்</p>
Source: Read Full Article