
<p>மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட வீல்சேர் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில், கோவா அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.</p>
<p>கோவை மாவட்டம் நரசீபுரம் பகுதியில் உள்ள கலைமகள் கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த தொடரில், தமிழ்நாடு மற்றும் கோவா அணிகள் பங்கேற்றன. மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட தொடராக நடைபெற்ற இப்போட்டியில், மாற்றுத்திறனாளிகள் வீல்சேரில் அமர்ந்தபடியே பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் செய்து தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.</p>
<p>தொடரின் முதல் போட்டியில் கோவா அணி வெற்றி பெற்று முன்னிலை பெற்றது. எனினும், அடுத்த இரண்டு போட்டிகளிலும் தமிழ்நாடு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.</p>
<p>இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்தது. இதையடுத்து 266 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கோவா அணி, தமிழ்நாடு அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 102 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. இதன் மூலம் தமிழ்நாடு அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.</p>
<p>தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை கோவா அணியின் நாகேஷ் ரெட்கர் வென்றார். தமிழ்நாடு அணியின் அசோக் குமார் சிறந்த பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார்.</p>
<p>போட்டி நிறைவில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணிக்கு சாம்பியன் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு திறமையை வெளிக்கொணரும் வகையில் நடைபெற்ற இந்தப் போட்டி பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.</p>
Source: Read Full Article