
<h2>நீட் தேர்வு- அச்சத்தில் மாணவ, மாணவிகள்</h2>
<p>மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்பது பலரது கனவாக இருந்து வருகிறது. ஆனால் பணம் உள்ளவர்களால் மட்டுமே நீட் தேர்வு பயிற்சியில் கலந்து கொண்டு மருத்துவ தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலையில், ஏழை எளிய மற்றும் கிராம்புற மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக மாறியுள்ளது. இதனால் நீட் தேர்விற்கு அச்சம் அடைந்து பல மாணவர்கள் தமிழகத்தில் மட்டுமல்ல பல மாநிலங்களிலும் தொடர்ந்து தற்கொலையால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்ற நிலையில், பல லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தார்கள். இந்த நிலையில் இந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி நீட் தேர்வானது ரத்து செய்யப்பட்டது. இதனால் பல லட்சம் மாணவர்கள் மீண்டும் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். </p>
<h2>நீட் தேர்வு முறைகேடு- மறு தேர்வு</h2>
<p>அந்த வகையில் கோவையைச் சேர்ந்த டாஸ்மாக் சங்க நிர்வாகி செந்தில் பிரவுவின் 19 வயது மகள் அனுகீர்த்தனா, மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார். ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதிய நிலையில் தேர்வில் தோல்வி அடைந்திருந்தார். இந்த நிலையில் தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் சிறப்பான முறையில் தேர்வு எழுதியிருப்பதாக நம்பிக்கையில் இருந்தார்.</p>
<p>ஆனால் வினாத்தாள் கசிவு சர்ச்சையினால் ரத்து செய்யப்பட்டு, வரும் 21-ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறை வினாத்தாள் கடினமாக வருமோ என்கின்ற அச்சத்திலும் அழுத்தத்திலும் மிகுந்த மன உளைச்சலில் இருந்த மாணவி, நேற்று முன் தினம் நள்ளிரவில் வீட்டில் இருந்த வலி நிவாரணி மருந்துகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.இதனையடுத்து மாணவியை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p>
<h2>நீட் தேர்வு பயம்- மாணவி தற்கொலை</h2>
<p>இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது சித்தப்பாவிற்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.</p>
<h2>மாணவியின் கடைசி மெசேஜ்</h2>
<p>அதில், "நான் நீட் தேர்வு எழுதி விட்டு மருத்துவக் கல்லூரியில் சேரக் காத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் தேர்வை ரத்து செய்து விட்டார்கள். இப்போது மீண்டும் தேர்வு எழுத பயமாக இருக்கிறது. தந்தை எனக்காக நிறைய செலவு செய்து விட்டார்கள், இனிமேல் அவர்கள் முகத்தில் நான் எப்படி ? விழிப்பேன் என்று தெரியவில்லை" என மன வருத்தத்தோடு மெசேஜ் அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது.இந்த நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.</p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/00RV2ffU3tk?si=At5ACqdln4nUSWVU" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h3>மாணவி குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு கொடுங்க</h3>
<p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதவில்,கோவையில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்.கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, கோவைபுதூர் பாரூக் நகரைச் சேர்ந்த தோழர் செந்தில் பிரபு. கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு (CITU) தொழிற்சங்க மாவட்ட செயலாளராக உள்ள இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் அனுகீர்த்தனா (19) எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து, நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருந்தார். </p>
<p>இந்த நிலையில் "நான் நீட் தேர்வு எழுதி விட்டு மருத்துவக் கல்லூரியில் சேரக் காத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் தேர்வை ரத்து செய்து விட்டார்கள். இப்போது மீண்டும் தேர்வு எழுத பயமாக இருக்கிறது. தந்தை எனக்காக நிறைய செலவு செய்து விட்டார்கள், இனிமேல் அவர்கள் முகத்தில் நான் எப்படி ? விழிப்பேன் என்று தெரியவில்லை" என மன வருத்தத்தோடு குருஞ்செய்தி பதிவிட்டு விஷமருந்தி உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் என்னை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அன்பு மகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த ஆறுதலையும் தெரிவித்து கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். </p>
<p><strong>(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)</strong></p>
Source: Read Full Article