
<h3 dir="ltr"><strong>காதலாக மாறிய பழக்கம்</strong></h3>
<p dir="ltr">திண்டுக்கல் மாவட்டம் கடம்பா குளம் பகுதியை சேர்ந்தவர் 22 வயதுடைய நாகலட்சுமி. இவருக்கு நத்தம் பகுதியை சேர்ந்த தனது உறவினரான அரவிந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது</p>
<p dir="ltr">பின்னர் இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றி வந்த நிலையில் இவர்களது காதலை அறிந்த நாகலட்சுமியின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கின்றனர். இருப்பினும் தொடர்ந்து நாகலட்சுமி அரவிந்த் உடன் பேசி வந்த நிலையில் அவரது வீட்டில் அவசர அவசரமாக திருமண ஏற்பாடு செய்திருக்கின்றனர்.</p>
<p>அதன்படி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நாகலட்சுமிக்கு அய்யலூர் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய வீரமணி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நாகலட்சுமி அவரது காதலன் அரவிந்த் உடன் பேசி வந்திருக்கிறார்.</p>
<h3><strong>மனைவியை எச்சரித்த கணவர்</strong></h3>
<p>அவ்வப்போது தனியாக போனை எடுத்து சென்று நீண்ட நேரம் அரவிந்த் உடன் பேசி வந்ததால் மனைவியின் செயலில் சந்தேகமடைந்த வீரமணி இது குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் நாகலட்சுமி மற்றும் அரவிந்த் காதலை அறிந்து அதிர்ச்சி அடைந்த வீரமணி இருவரையும் கண்டித்ததாக சொல்லப்படுகிறது.</p>
<p>எனவே நாகலட்சுமி அரவிந்த் உடன் பேசுவதை தவிர்த்து வந்த நிலையிலும் அரவிந்த் தொடர்ந்து தன்னுடன் பேசுமாறு தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இந்நிலையில் நாகலட்சுமி தனது கணவருடன் தாய் வீட்டில் நடக்கும் திருவிழாவிற்கு சென்றிருந்த நிலையில் மீண்டும் நாகலட்சுமியை போனில் தொடர்பு கொண்ட அரவிந்த் அவரை நேரில் சந்தித்து பேச வேண்டும் என தொல்லை கொடுத்திருக்கிறார். இதில் விருப்பமில்லாத நாகலட்சுமி அரவிந்த் தன்னை தொடர்ந்து தொல்லை செய்து வருவதாக கணவர் வீரமணியிடம் கூறியுள்ளார்.</p>
<h3><strong>மெசேஜ் அனுப்பி வரவழைத்து கொலை</strong></h3>
<p>இதனால் ஆத்திரமடைந்த வீரமணி அரவிந்தை கொலை செய்ய திட்டமிட்டு தனது மனைவியின் போனில் இருந்து அரவிந்த்க்கு சிறுமலை தாளக்கடை பகுதிக்கு வர சொல்லி மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அதனை தொடர்ந்து , அரவிந்த் சிறுமலை பகுதிக்கு வந்த நிலையில் அங்கு காத்திருந்த வீரமணி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் அவரது உடலை அங்கிருந்த குப்பை கிடங்கில் மறைத்து வைத்து விட்டு மலை பகுதியிலேயே சுற்றி திரிந்திருக்கிறார்.</p>
<p>இதற்கிடையில் அரவிந்த் காணவில்லை என அவரது குடும்பத்தினர் நத்தம் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் நகலெட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் வீரமணி தலைமறைவாக இருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து மலையில் சுற்றி திரிந்த வீரமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் அரவிந்த்தை கொலை செய்து உடலை குப்பை கிடங்கில் மறைத்து வைத்திருந்ததாக வாக்குமூலம் கொடுத்தார். அதனை தொடர்ந்து குப்பை கிடங்கில் இருந்த உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வீரமணியை சிறையில் அடைத்தனர்.</p>
Source: Read Full Article