
<p style="text-align: justify;">தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாள் வரும் ஜூன் 22-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியூட்டும் வகையிலான சிறப்பான அறிவிப்பு ஒன்றை தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார் வெளியிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.</p>
<h3 style="text-align: justify;">3 முக்கிய உயிரியல் பூங்காக்களுக்கு இலவச அனுமதி</h3>
<p style="text-align: justify;">செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார் பேசியதாவது: "தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் குடும்பங்களுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில் ஒரு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூன் 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் ஜூன் 22-ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்குத் தமிழகத்திலுள்ள மூன்று முக்கிய வன உயிரியல் பூங்காக்களைப் பொதுமக்கள் கட்டணமின்றி இலவசமாகப் பார்வையிடலாம்.</p>
<p style="text-align: justify;">இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி சிறு உயிரியல் பூங்கா மற்றும் சேலம் குரும்பட்டியிலுள்ள வன உயிரியல் பூங்கா ஆகிய மூன்று பூங்காக்களிலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் இந்த இரண்டு நாட்களும் எவ்வித கட்டணமுமின்றி அனுமதிக்கப்படுவர்.</p>
<h3 style="text-align: justify;">கிண்டி பூங்காவிற்கு விலக்கு அளிக்கப்பட்டதன் காரணம்</h3>
<p style="text-align: justify;">சென்னையிலுள்ள கிண்டி சிறுவர் பூங்காவிற்கு ஏன் இந்த அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறித்தும் அமைச்சர் விளக்கம் அளித்தார். "கிண்டி காந்தி மண்டப வளாகத்திலுள்ள சிறுவர் பூங்காவானது பரப்பளவில் சிறியது மற்றும் அங்குள்ள பாதைகளும் மிகவும் நெருக்கடியானவை. வார இறுதி நாட்களிலும், முதலமைச்சர் பிறந்தநாளிலும் அங்கு இலவச அனுமதி அளித்தால் மிக அதிக அளவில் கூட்டம் கூடி நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே கிண்டி பூங்காவிற்கு விலக்கு அளிக்கப்பட்டு, மற்ற மூன்று பெரிய பூங்காக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.</p>
<h3 style="text-align: justify;">ஆன்லைன் முன்பதிவு மற்றும் ரூ.70 லட்சம் கட்டணத்தை ஏற்கும் அறக்கட்டளை</h3>
<p style="text-align: justify;">இந்த இலவச அனுமதி தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தாமல் இருக்க, இதற்கான அனுமதிச் சீட்டுகளை (Entry Tickets) பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமை குறித்துப் பேசிய அமைச்சர், "இந்த இரண்டு நாட்களுக்கான ஒட்டுமொத்தப் பூங்காக் கட்டணத் தொகையான சுமார் 70 லட்சம் ரூபாயை அரசிடமிருந்து பெறாமல், எங்கள் குடும்ப அறக்கட்டளையான 'வாழ் முனி நாயக்கர் அறக்கட்டளை' மூலமாக முழுமையாகச் செலுத்திவிடுவோம். எங்கள் ஆட்சி அமைவதற்குக் குழந்தைகளே முக்கியக் காரணம், அவர்கள் தெய்வத்திற்குச் சமமானவர்கள். எனவே, அவர்கள் தங்கள் குடும்பத்தோடு முதலமைச்சரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கான சிறு பரிசு இது" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.</p>
<h3 style="text-align: justify;">52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பிரம்மாண்ட திட்டம்</h3>
<p style="text-align: justify;">முதலமைச்சரின் 52-வது பிறந்தநாளைச் சுற்றுச்சூழல் திருவிழாவாகக் கொண்டாடும் வகையில், வனத்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூன் 22-ஆம் தேதியன்று ஒரே நாளில் 52,000 மரக்கன்றுகள் நடும் பிரம்மாண்ட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுமட்டுமன்றி, சென்னை தலைமைச் செயலக வளாகத்திற்குள்ளும் முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுவதற்கு ஏதுவான இடங்களைத் தேர்வு செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பிறந்தநாளன்று அங்கேயும் மரக்கன்றுகள் நடப்படும் என்றும் வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார் தனது பேட்டியில் உறுதிபடத் தெரிவித்தார்.</p>
Source: Read Full Article