
<p><span dir="auto">அமெரிக்கா உடன் உருவாகி வரும் அமைதி ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு ஈரான் இணங்கத் தவறினால், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மீண்டும் தொடங்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில், எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசியுடன் இணைந்து பேசிய ட்ரம்ப், தற்போதைய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு இறுதி ஒப்பந்தம் அல்ல என்றும், அது இன்னும் முறியக்கூடும் என்றும் கூறினார். எதிர்கால உறவுகள் குறித்து பரந்த புரிதலை எட்டுவதற்கான முயற்சிகளை இரு தரப்பினரும் தொடர்ந்து வரும் நிலையில், அவரது கருத்துக்கள், பேச்சுவார்த்தைகளின் இழுபறி குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.</span></p>
<h2><span dir="auto">“அதிருப்தி ஏற்பட்டால் ராணுவ நடவடிக்கை“</span></h2>
<p><span dir="auto">ஈரான் உடனான ஒப்பந்தம் நிறைவடைந்துவிட்டதா என்று கேட்கப்பட்டபோது, பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவடையவில்லை என்று ட்ரம்ப் தெளிவுபடுத்தினார். </span><span dir="auto">"இல்லை, இது இறுதியானதல்ல," என்று கூறிய அவர், அந்த ஏற்பாட்டை ஒரு கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் என்பதை விட, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று விளக்கினார்.</span></p>
<p><span dir="auto">ஒப்பந்தத்தின் முன்னேற்றம் குறித்து தனக்கு அதிருப்தி ஏற்பட்டால், வாஷிங்டன் மீண்டும் ராணுவ நடவடிக்கைக்கு திரும்பக்கூடும் என்று அமெரிக்க அதிபர் எச்சரித்தார். ஈரான் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறினால், அமெரிக்கா "மீண்டும் அவர்களை நோக்கிச் சுடும்" மற்றும் "குண்டுகளை வீசும்" என்றும் அவர் கூறினார்.</span></p>
<p><span dir="auto">ஈரான் ஒழுங்காக நடந்துகொள்ளாவிட்டால், அமெரிக்கா மீண்டும் ராணுவத் தாக்குதல்களைத் தொடங்கும் என்று ட்ரம்ப் அந்த எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். ட்ரம்ப் </span><span dir="auto">கடுமையாக பேசிய போதிலும், டெஹ்ரானுடனான ஒப்பந்த வாய்ப்புக்கு பங்குச் சந்தைகள் சாதகமாக பதிலளித்துள்ளதாக ட்ரம்ப் கூறினார்.</span></p>
<p><span dir="auto"><iframe title="Sivaganga Govt School | குப்பை அள்ளிய மாணவர்கள் "நீங்க செய்ய வேண்டியது தானே" ஹெட்மாஸ்டரை வெளுத்த DEO" src="https://www.youtube.com/embed/Wg6i_H4qJoo" width="696" height="391" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></span></p>
<h2><span dir="auto">“நிதி கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன“</span></h2>
<p><span dir="auto">விரைவில் மேற்கொள்ளப்பட உள்ள அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தில், ஈரானின் புனரமைப்புக்காக 300 பில்லியன் டாலர் வரை நிதி ஒதுக்கப்படலாம் என்று வெளியாகும் செய்திகளையும் ட்ரம்ப் நிராகரித்தார். </span><span dir="auto">அந்த அறிக்கைகள் தவறானவை என்று கூறிய அவர், நாட்டில் புனரமைப்புத் திட்டங்களுக்கு வாஷிங்டன் எந்த பணத்தையும் வழங்காது என திட்டவட்டமாக கூறினார்.</span></p>
<p><span dir="auto">"நாங்கள் ஒரு பைசா கூட கொடுக்கப் போவதில்லை," என்று கூறிய ட்ரம்ப், இந்த பேச்சுவார்த்தைகளுடன் தொடர்புடைய எந்த முதலீட்டு நிதியும் அமெரிக்காவிடம் இல்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், </span><span dir="auto">ஈரானில் முதலீடு செய்யுமாறு வளைகுடா நாடுகளை தாம் ஊக்குவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும், எதிர்காலத்தில் அத்தகைய முதலீடுகளை தொடர அவர்கள் விரும்பினால், அது அவர்களின் சொந்த முடிவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</span></p>
<p><span dir="auto">அதே நேரத்தில், இறுதியில் எட்டப்படும் எந்தவொரு ஒப்பந்தத்தின் கீழும் ஈரானின் நடத்தை குறித்து பிராந்திய அரசுகள் திருப்தி அடையும் வரை, நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அவை காத்திருக்கக்கூடும் என்று ட்ரம்ப் தெரிவித்தார்.</span></p>
<p><span dir="auto">இரு நாடுகளுக்கும் இடையே, வெள்ளிக்கிழமை அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் ஒரு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று உலக நாடுகள் காத்திருக்கும் நிலையில், ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கை புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</span></p>
<p> </p>
<p><span dir="auto"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/eating-beetroot-on-an-empty-stomach-gives-these-health-benefits-know-details-264121" width="631" height="381" scrolling="no"></iframe></span></p>
Source: Read Full Article