
<p><strong>TN POCSO Crime:</strong> பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் கோட்டைவிட்ட திமுகவை போன்று இல்லாமல், தவெக அரசு பாதுகாப்பை உறுதி செய்யுமா? என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.</p>
<h2><strong>பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:</strong></h2>
<p>தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தெருவில் விளையாடும் குழந்தைகள் தொடங்கி அதிகாலையில் நடைபயிற்சி மேர்கொள்ளும் மூதாட்டி வரையிலான பல்வேறு தரப்பினரும் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளனர். இது சட்ட - ஒழுங்கிற்கும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது. இதனை மையப்படுத்தி மிகப்பெரிய அரசியல் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. தவெக தலைமையிலான அரசு அமைந்தபிறகே தமிழ்நாட்டில் மோசமான குற்றச்சம்பவங்களும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருவதாகவும், அரசின் இயலாமை மற்றும் அனுபவமின்மையே இதற்கு காரணம் என்றும் பல்வேறு அரசியல் குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/when-you-have-to-chnage-your-bike-chain-details-in-pics-264606" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<h2><strong>ஆண்டுக்கு 7,000 போக்சோ வழக்குகள்..</strong></h2>
<p>ஆனால், தேசிய குற்ற ஆவண காப்பாகம் தரப்பில் இருந்து கிடைக்கும் தரவுகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளன. இதில் பெரும்பாலான சம்பவங்கள் மது மற்றும் போதை பொருட்களை பயன்படுத்திய நிலையில் அரங்கேறியுள்ளன. அதிகபட்சமாக கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சுமார் 7 ஆயிரம் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போதைபொருள் நடமாட்டத்தை கடந்த ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்த தவறியதே, தமிழ்நாட்டின் இந்த அவல நிலைக்கு காரணம் என புதியதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு குற்றம்சாட்டுகிறது.</p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/WlU453L2rfk?si=QXMGprbyxzrG7Lgw" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>நாளொன்றிற்கு 530+ போக்சோ வழக்குகள்:</strong></h2>
<p>தரவுகளின்படி, கடந்த 2020ம் ஆண்டில் 3 ஆயிரத்து 57 வழக்குகளும், 2021ம் ஆண்டு 4 ஆயிரத்து 415 வழக்குகளும், 2022ம் ஆண்டு 4 ஆயிரத்து 906 வழக்குகளும், 2023ம் ஆண்டு 4 ஆயிரத்து 581 வழக்குகளும், 2024ம் ஆண்டு 6 ஆயிரத்து 975 வழக்குகளும் போக்சோ பிரிவில் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக நாளொன்றிற்கு சுமார் 530-க்கும் அதிகமான வழக்குகள் தமிழ்நாட்டில் மட்டுமே பதிவாகியுள்ளன. 2021 தொடங்கி 2024 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 18 ஆயிரத்து 518 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் பொதுநிகழ்ச்சி ஒன்றில் பேசிய அப்போதைய சமூக நல அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்து இருந்தார். இதனை குறிப்பிட்டு விஜய் முதலமைச்சரான பிறகு தான் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்ததாக திமுகவினர் திட்டமிட்டு பொய்களை பரப்பி வருவதாக தவெகவினர் பதிலடி தந்து வருகின்றனர்.</p>
<p><a title="CM Vijay Bday: பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்" href="https://tamil.abplive.com/news/politics/tamilnadu-chief-minister-vijay-52nd-birthday-celebration-today-will-get-surprise-announcement-assembly-live-tn-politics-264673" target="_self">இதையும் படியுங்கள்: CM Vijay Bday: பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்</a></p>
<h2><strong>பாதுகாப்பை உறுதி செய்யுமா தவெக அரசு?</strong></h2>
<p>இதனிடையே, முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> தலைமையிலான தவெக அரசு அமைந்த முதல் 38 நாட்களில் 150 போக்சோ வழக்குகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களாக 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் குற்றம்சாட்டி இருந்தார். இந்த தரவுகளை மேற்குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையுடன் ஒப்பிட்டாலே தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்து இருப்பதை உணர முடியும் என தவெகவினர் பேசுகின்றனர். எந்தவொரு குழந்தையும், பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்பதே எங்களின் எண்ணமும். அதேநேரம், சிறிது நேரம் கொடுத்தால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இன்னும் மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தப்படும் என்பதே தவெக அரசின் வாக்குறுதியாக உள்ளது.</p>
<h2><strong>நேரம் கேட்கும் தவெக அரசு..!</strong></h2>
<p>ஆட்சி அனுபவம் உள்ளவர்களே, 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரியணைக்கு வந்தால் தங்களுக்கு ஏற்ப அரசு இயந்திரத்தை மாற்றியமைத்து முழு வேகத்தில் இயங்க குறைந்தது 6 மாதங்களாகும். ஆனால், எந்தவித அனுபவமும் இல்லாத நிலையில், ஊழல் நிறைந்த இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு பழக்கப்பட்ட அரசு இயந்திரத்தை கையிலெடுத்துள்ள <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசுக்கு, சற்று நேரம் கொடுத்தால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வரமுடியும். இதையனைத்தும் அறிந்திருந்தும் ஊடகங்கள் டிஆர்பிக்காகவும், தங்களது சொந்த நலன் மற்றும் அரசியல் சார்பு காரணமாகவும் செய்திகளை மிகைப்படுத்தி வெளியிடுகின்றன. நிகழ்வுகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. அதேநேரம், கடந்த காலங்களை காட்டிலும் தற்போது எந்த அளவிற்கு குற்றங்கள் குறைந்துள்ளது, நடவடிக்கைகள் எவ்வளவு வேகமாக உள்ளன என்பதையும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஆளும் தரப்பின் முக்கிய நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p>
Source: Read Full Article