
<p>இலங்கையில் இந்தியா ஏ, ஆப்கானிஸ்தான் ஏ மற்றும் இலங்கை ஏ ஆகிய 3 நாடுகளின் அணிகள் மோதிய முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா ஏ - இலங்கை ஏ அணிகள் தகுதி பெற்றிருந்தன. </p>
<h2><strong>சூர்யவன்ஷி காட்டடி:</strong></h2>
<p>இரு அணிகளுக்குமான இறுதிப்போட்டி இன்று தம்புல்லா மைதானத்தில் நடந்தது. ஐபிஎல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பிரியன்ஷ் ஆர்யா, சூர்யவன்ஷி, ருதுராஜ், திலக் வர்மா இந்திய அணியில் இடம்பிடித்திருந்தனர். </p>
<p>இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி - பிரியன்ஷ் ஆர்யா ஆட்டத்தை தொடங்கினர். சூர்யவன்ஷி தனி ஆளாக அதிரடி காட்டினார். ஐபிஎல் தொடரில் ஆடுவது போல அதிரடியாக ஆடினார். பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அனுப்பினார். </p>
<h2><strong>94 ரன்கள்:</strong></h2>
<p>மறுமுனையில் பிரியன்ஷ் ஆர்யா அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார். சிக்ஸர் மழை பொழிந்த சூர்யவன்ஷி 29 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதில் 10 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் அடங்கும். இந்திய அணி அப்போதே 8.5 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்திருந்தது. பிரியன்ஷ் ஆர்யா மறுமுனையில் 29 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார். </p>
<p>அடுத்து ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்கள் எடுக்க கேப்டன் திலக் வர்மா 90 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 67 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அன்குல்ராய் 15 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசியில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் எடுத்தது. </p>
<h2><strong>378 ரன்கள் இலக்கு:</strong></h2>
<p>378 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர் அவிஷ்கா 3 ரன்னில் அவுட்டாக, நிரோஷன் 25 ரன்களிலும், நுவனிந்து 21 ரன்களிலும் அவுட்டாக, 75 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த நிலையில் சதீரா சமரவிக்ரமா - கேப்டன் சஹான் ஜோடி நிதானமாக ஆடியது. </p>
<p>சதீரா 52 ரன்களுடனும், சஹான் 38 ரன்களுடனும் அவுட்டாக வனுஜா ஷகான் 62 ரன்கள் கடைசி கட்டத்தில் எடுத்து போராடினார். அவருக்கு விஜயகாந்த் 39 ரன்கள் எடுத்து ஒத்துழைப்பு அளிக்க கடைசியில் இலங்கை அணி 47.1 ஓவர்களில் 311 ரன்களுக்கு அவுட்டானது. </p>
<h2><strong>தொடரை வென்ற இந்தியா:</strong></h2>
<p>இந்திய அணியில் யஷ் தாக்கூர், விப்ராஜ் நிகாம் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அன்குல் ராய் 2 விக்கெட்டும், கேப்டன் திலக் வர்மா மற்றும் அசோக் சர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணி இந்த போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த முத்தரப்பு தொடரை கைப்பற்றியது. </p>
<h2><strong>நேற்று சீனியர், இன்று ஜுனியர்:</strong></h2>
<p>இந்திய சீனியர் அணி நேற்று ஆப்கானிஸ்தான் அணியுடனான கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில், இன்று இந்திய ஏ அணி தொடரை வென்று அசத்தியுள்ளது.</p>
Source: Read Full Article