
<p>தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகளால் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. இந்த தேர்தலின் முடிவுகளால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட கட்சியாக அதிமுக உருவெடுத்துள்ளது.</p>
<h2><strong>தேர்தல் தோல்வி:</strong></h2>
<p>தேர்தலின் முடிவுகளின் தொடக்கத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறும் வகையில் இருந்த அதிமுக தேர்தல் முடிவு இறுதியில் 3வது இடத்தைப் பிடித்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர் தோல்வியைச் சந்தித்து வந்த அதிமுக-விற்கு இந்த தேர்தல் தோல்வி மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கியது. </p>
<p>தவெக-விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பான விவகாரம், திமுக-வுடன் கூட்டணி வைக்க முயற்சித்தது என எடப்பாடி பழனிசாமி மீது சரமாரியான விமர்சனங்கள் எழுந்த நிலையில், 4 அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் ஐக்கியமானார்கள். </p>
<h2><strong>விலகப்போகும் முக்கிய புள்ளிகள்:</strong></h2>
<p>இந்த சூழலில், அதிமுக-வின் முக்கிய தூணாக திகழும் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகமும், விஜயபாஸ்கரும் கட்சியில் இருந்து விலக இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. இவர்கள் இருவரும் அதிமுக-வில் இருந்து விலகி <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a>-வில் ஐக்கியமாக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. </p>
<p>அதிமுக-வின் இந்த தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவு மற்றும் அவரது குடும்பத்தின் தலையீடு என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றம் சாட்டி வருகிறார். மேலும், தனக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக நிர்வாகிகளின் கட்சிப்பொறுப்பை பறித்ததுடன் அவர்கள் மீண்டும் ஆதரவு தெரிவித்தும் அவர்களுக்கு கட்சிப்பதவியை எடப்பாடி பழனிசாமி தர மறுத்ததும் பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. </p>
<h2><strong>என்ன செய்யப்போகிறார் இபிஎஸ்?</strong></h2>
<p>தேர்தலுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் தேர்தலுக்கு பிறகு அதிமுக மிகவும் பலவீனமாக மாறியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஆகியோர் திமுக-வில் ஐக்கியமாகிய நிலையில், தினகரன் தனிக்கட்சி தொடங்கிவிட்டார். சசிகலாவும் மீதான எதிர்பார்ப்பும் அதிமுக-வினர் மத்தியில் அடங்கிவிட்டது. </p>
<p>சரியான தலைமையும் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி மீதான அடுத்தடுத்த விமர்சனங்களால் அதிமுக ஆதரவாளர்கள் தற்போது நிலைகுலைந்துள்ளனர். அதிமுக-வின் தற்போதைய சூழலில் அவர்களால் சட்டமன்ற இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுந்துள்ளது. இதனால், அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுவார்களா? என்ற கேள்வியும் உருவாகியுள்ளது. அடுத்தடுத்த நெருக்கடியால் என்ன செய்வது என்று தெரியாமல் எடப்பாடி பழனிசாமி திக்குமுக்காடியுள்ளார்.</p>
<p> </p>
Source: Read Full Article