
<p style="text-align: justify;">தமிழ்நாட்டில் 4,829 'டாஸ்மாக்' மதுகடைகள் இயங்கி வருகின்றன. மாதம் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் துறையாக 'டாஸ்மாக்' இருக்கிறது. ஆனால் மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதால், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது.</p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/15/b34f6de197a1aecbdf6d1ef2ddb4fc921781531420285193_original.JPG" /></p>
<p style="text-align: justify;">தற்போது, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைந்துள்ளது. விஜய் முதலமைச்சராக பதவியேற்றவுடன். தமிழகத்தில் போதைப் பொருள் பரவலைக் கட்டுப்படுத்தவும், இளைஞர்களைப் பாதுகாக்கவும் 65 சிறப்பு படைகள் அமைக்கப்படும் என்று ஆணை பிறப்பித்தார்.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில், தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். அதன்படி வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து, ரயில் நிலையம் அருகே 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்படும் 255 'டாஸ்மாக்' கடைகளை 2 வாரங்களுக்குள் மூட உத்தரவிட்டிருந்தார். மூடப்படும் கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் வேறு கடைகளுக்கு பணி அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் டாஸ்மாக்' பார்களில் சட்டவிரோத மது விற்பனை தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இதனிடையே, பல்வேறு கட்சி தலைவர்கள் டாஸ்மாக் கடை மூடல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில், தமிழக அரசு தற்போது மூடப்பட்ட டாஸ்மாக் கடையின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மூடப்பட்ட 717 மதுக்கடைகளை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் மதவழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> உத்தரவிட்டு இருந்தார். பொதுமக்களின் வேண்டுகோள் மற்றும் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.</p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/15/b1780fc57f05563f2e84fb2faef04cee1781531450426193_original.JPG" /></p>
<p style="text-align: justify;">இந்நிலையில் எந்த பகுதிகளில் எங்கெங்கு உள்ள கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன என்ற பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் 717 மதுக்கடைகள் எண்களுடன் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டம்வாரியாக எத்தனை கடைகள் மூடப்பட்டு உள்ளன என்ற எண்ணிக்கையும் வெளியிடப்பட்டு இருக்கிறது.</p>
<p style="text-align: justify;">அதன் விவரம் வருமாறு, சென்னை வடக்கு - 13,சென்னை மத்தி - 9, சென்னை தெற்கு -9, காஞ்சிபுரம் வடக்கு-10, காஞ்சிபுரம் தெற்கு -8, திருவள்ளூர் கிழக்கு -27, கோவை வடக்கு-48, கோவை தெற்கு-23, கரூர் - 8,ஈரோடு - 42, திருப்பூர் - 31, நீலகிரி - 27,அரக்கோணம் - 7,தர்மபுரி - 7, கிருஷ்ணகிரி-7, நாமக்கல் - 14, சேலம் - 22, திருவண்ணாமலை - 19,வேலூர் - 6,கடலூர் - 21, நாகை - 4, புதுக்கோட்டை-17,பெரம்பலூர் - 6, தஞ்சை-6,திருச்சி-15, திருவாரூர்-6, விழுப்புரம்- 9, திண்டுக்கல் - 26, கன்னியாகுமரி-15, ராமநாதபுரம்-29, தேனி-12, திருநெல்வேலி-33, தூத்துக்குடி-63,மதுரை தெற்கு-39, மதுரை வடக்கு - 13, விருதுநகர் - 42, சிவகங்கை - 18, இதில் அதிகளவாக தூத்துக்குடியில் 63 கடைகளும், குறைந்த அளவாக நாகையில் 4 கடைகளும் மூடப்பட்டு உள்ளன.</p>
Source: Read Full Article