
<p>பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> இன்று அந்த கூட்டத்தில் பேசியதாவது,</p>
<h2><strong>வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு:</strong></h2>
<p>நிதி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் கூட்டத்தைக் கூட்டியமைக்காக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறவும், அனைத்துத் தரப்பு உள்ளடக்கிய வளர்ச்சியாகவும் அமைந்திட செயல்படுத்தப்படும் திட்டங்களை முழு மனதோடு வரவேற்போம். </p>
<p>மேலும், அதிகாரமளிக்கப்பட்ட மாநிலங்கள், கூட்டுறவுக் கூட்டாட்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் மூலமாக மட்டுமே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்று தமிழ்நாடு உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளது.</p>
<p>வெளிப்படையான நிர்வாகம், சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் சமச்சீரான முன்னேற்றம் ஆகிய அடிப்படை கொள்கைகளை முன்னிறுத்தி, தமிழ்நாட்டு மக்கள் எங்கள் அரசுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளனர். </p>
<h2><strong>ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு:</strong></h2>
<p>அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டின் நலன்களையும் மக்களின் விருப்பங்களையும் உறுதியாகப் பாதுகாக்கும் வேளையில், ஒன்றிய அரசுடன் <br />ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு எங்கள் அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.</p>
<p>உலகளாவிய அளவில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதார சூழல்களுக்கு இடையிலும், இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் உறுதித்தன்மையையும் திகழும் தமிழ்நாடு. தொடர்ச்சியான தனது வளர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறது. </p>
<h2><strong>ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்:</strong></h2>
<p>பல்வேறு துறைகளை உள்ளடக்கிய வலுவான பொருளாதார அமைப்பு மற்றும் நமது தொழிலாளர்களின் உற்பத்தித் திறனைப் பிரதிபலிக்கும் வகையிலும், 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நமது அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையிலும், 2036-ஆம் ஆண்டிற்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வதற்கு தமிழ்நாடு பணியாற்றி வருகிறது. </p>
<p>இந்தத் தொலைநோக்குப் பார்வை இளைஞர்கள், ஏழைகள், பெண்கள் மற்றும் விவசாயிகள் என்ற நான்கு முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றில் தமிழ்நாட்டின் முன்னுரிமைகள் நெருக்கமாக ஒவ்வொன்றுடனும் இணைந்துள்ளன. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கும் பயணத்திற்கும் இன்றியமையாத சில முக்கிய முன்னுரிமைகளை, இந்த ஆட்சிமன்றத்தின் முன் எடுத்துரைக்க விரும்புகிறேன்.</p>
<h2><strong>முதலீடு:</strong></h2>
<p>இந்தியாவின் மிகப்பெரிய வலிமை அதன் இளைய தலைமுறை மக்கள் தொகையாகும். இந்த இளைய தலைமுறை மக்கள்தொகைப் பலனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள. தமிழ்நாடு கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் தொடர்ந்து முதலீடு செய்யும்.<br />இந்த நோக்கத்தை மையமாகக் கொண்டு ஆண்டுதோறும் ஐந்து இலட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பணியிடைப் பயிற்சிகள் (Internships) மற்றும் தொழில்துறையுடன் இணைந்த திறன் பயிற்சிகளை வழங்கும் "இளைஞர் திறன் மற்றும் (Youth Skill and Employment Mission) செயல்படுத்த விழைகிறேன். </p>
<h2>நிதி ஒதுக்கீடு கோரிக்கை:</h2>
<p>மேலும். ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் திறன் மையங்களை அமைப்பதற்கும், செயற்கை நுண்ணறிவு, ஆழ்தொழில்நுட்பம் (Deep Technology), இணையப் பாதுகாப்பு, மேகக் கணினி தொழில்நுட்பம் (Cloud Computing), மின்சார வாகனத் தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்தி (Semiconductor) தொடர்புடைய துறைகளில் பயிற்சி அளிப்பதற்கும் ஒன்றிய அரசின் ஆதரவைக் கேட்டுக்கொள்கிறோம்.</p>
<p>குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகள் மற்றும் திறன் வாய்ந்த ஆட்சிமுறையை உருவாக்கும் நோக்கில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் தமிழ்நாடு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்நோக்கை வலுப்படுத்தும் வகையில், உலகத் தரத்திலான தொடக்க நிறுவன வளர்ப்பு மையங்களை அமைப்பதற்கும், ஆழ்தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான துணிகர முதலீட்டு சூழலை உருவாக்குவதற்கும், பயன்பாட்டு ஆராய்ச்சிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கும் ஒன்றிய அரசின் ஆதரவைக் கேட்டுக்கொள்கிறோம்.</p>
<h2><strong>நீட்-க்கு எதிர்ப்பு:</strong></h2>
<p>அதேபோல், நமது மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. </p>
<p>ஏனெனில், இந்தத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கிராமப்புற மாணவர்களும். சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மேற்கண்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம் (MBBS), பல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலைப் பட்டம் (BDS) மற்றும் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவப் (AYUSH) படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p>
<p>இவ்வாறு அவர் பேசினார்</p>
Source: Read Full Article