
<p>பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> பங்கேற்று பேசினார். அதில் அவர் பேசியதாவது,</p>
<h2><strong>சாலைத் திட்டங்கள்:</strong></h2>
<p>பின்வரும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகத்திடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.</p>
<p>ஜி.எஸ்.டி. சாலையின் (NH-32) செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான பகுதியை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்துதல்.</p>
<p>NH-81 திருச்சி (பஞ்சப்பூர்) - ஜீயபுரம் - கரூர் பகுதியை ஆறு வழிச்சாலையாக (Six Lane) மேம்படுத்துதல்.</p>
<p>NH-81 கரூர் கோயம்புத்தூர் பகுதியை ஆறு வழிச்சாலையாக (Six Lane) மேம்படுத்துதல்.</p>
<p>NH-87 மாதவரம் சோழவரம் இடையே உயர்த்தப்பட்ட வழித்தடம் (Elevated Corridor) அமைத்தல். </p>
<p>சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிவேக ரயில் வழித்தடம் (High Speed Rail Corridor) அமைத்தல்.</p>
<p>எண்மிய (Digital) இணைப்பு வசதியைப் பொறுத்தவரை. தமிழ்நாட்டில் பாரத்நெட் இரண்டாம் கட்டத் திட்டம் சுமார் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எனவே, மீதமுள்ள கடைசிக் கட்ட இணைப்பு சவால்களைத் தீர்க்கவும். வலைப்பின்னல் (Network) செயல்பாடுகளைத் தொடர்ச்சியாக நிலைநிறுத்தவும், அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளும் இணைய இணைப்புடன் இணைக்கப்படுவதையும் உறுதி செய்ய இந்திய அரசின் ஆதரவை நான் கேட்டுக்கொள்கிறேன்.</p>
<h2>கூட்டுக்குடிநீ்ர் உதவி:</h2>
<p>மேலும், ஒகேனக்கல் மூன்றாம் கட்டக் கூட்டுக்குடிநீர் (Hogenakkal Phase-III Combined Water Supply Scheme) ரூ.2.283.40 கோடி அளவிலான உறுதியளிக்கப்பட்ட ஒன்றிய நிதி உதவியை வழங்குமாறு இந்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.</p>
<p>நிதிப் பொறுப்புணர்வு, சமூக முன்னேற்றம் மற்றும் மக்கள் தொகை நிலைநிறுத்தல் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்கள் உரிய அங்கீகாரத்தையும் போதுமான ஆதரவையும் பெற வேண்டும். இம்மாநிலங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது.</p>
<p>மாநில அரசின் ஊரக வீட்டுவசதித் திட்டங்களுக்கும், ஒன்றிய அரசின் வளர்ச்சியடைந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்திரவாதத் திட்டத்தின் (கிராமப்புறம்) (VB-G RAM-G) கீழ் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறு இவ்வாய்ப்பின் மூலம் ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.</p>
<h2><strong>கல்வி நிதி:</strong></h2>
<p>'ஒருங்கிணைந்த கல்வி' (Samagra Shiksha) திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.3.284 கோடி நிதியை, எவ்வித நிபந்தனைகளும் இன்றியும், புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தவோ அல்லது மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தவோ வற்புறுத்தாமலும் விரைவாக விடுவிக்குமாறு இந்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.</p>
<h2><strong>திருக்குறள்:</strong></h2>
<p>நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற விழுமியங்களுக்கு தனித்துவமாக விளங்கும் தொன்மையான நூலான திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்குமாறு இந்திய அரசிடம் இம்மன்றத்தின் முன் கோரிக்கை விடுக்க விழைகிறேன்.<br />மாநிலங்கள் வலுப்பெறும்போது, இந்தியாவும் வலிமை பெறுகிறது என்று தமிழ்நாடு உறுதியாக நம்புகிறது. </p>
<p>இவ்வாறு அவர் பேசினார். </p>
Source: Read Full Article