
<p class="isSelectedEnd">சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 20 தங்கம் உட்பட மொத்தம் 39 பதக்கங்களை வென்று சாதனை படைத்த கோவை மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.</p>
<p class="isSelectedEnd">ஐ.எஸ்.கே.ஏ. சர்வதேச கராத்தே விளையாட்டு சங்கம் சார்பில் தேசிய அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மே 28ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் சென்னை நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.</p>
<p class="isSelectedEnd">தமிழ்நாடு அணி சார்பில் கோவை துடியலூரில் செயல்பட்டு வரும் ஆண்ட்லி பிளாக் பெல்ட் அகாடமியில் பயிற்சி பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 16 மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். ஃபார்ம்ஸ், பாயிண்ட் ஸ்பேரிங், லைட் கான்டாக்ட் மற்றும் லோ கிக் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடிய மாணவர்கள் 20 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தம் 39 பதக்கங்களை கைப்பற்றினர்.</p>
<p class="isSelectedEnd">போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் இணைந்து மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். மாணவர்களுக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்து அவர்களின் சாதனையை கொண்டாடினர்.</p>
<p>இதுகுறித்து ஆண்ட்லி பிளாக் பெல்ட் அகாடமியின் நிறுவனர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்லி கூறுகையில், தமிழக மாணவர்கள் கிக் பாக்சிங் போட்டிகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தொடர்ந்து சாதனை படைத்து வருவதாக தெரிவித்தார். மேலும், புதிய அரசில் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஆதவ் அர்ஜுனா, கிக் பாக்சிங் உள்ளிட்ட தற்காப்புக் கலை விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.</p>
Source: Read Full Article