
<p> மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.</p>
<p>சேலம் அரசு மருத்துவமனையில் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்தனர். கர்ப்பிணி பெண்ணும் கருவில் இருந்த குழந்தையும் உயிருடன் காப்பாற்றப்பட்டனர்.</p>
<p>சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரிய வகை அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி பெண்ணும், கருவில் இருந்த குழந்தையும் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.</p>
<p> </p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/tkLwLNUrCmk?si=tkXCG69AuStbe8ys" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த பரமேஸ்வரி (24) என்ற கர்ப்பிணி பெண், மூக்கு வழியாக சுவாசிக்க முடியாமல் கடுமையான மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார். இதற்காக பல தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றபோது, தாயின் உயிரைக் காக்க குழந்தையை அகற்ற வேண்டிய நிலை இருப்பதாகவும், சிகிச்சை அளித்தாலும் குழந்தையின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p>
<p>இந்நிலையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு வந்த அவர், அங்கு காது, மூக்கு, தொண்டை (ENT) துறை தலைவர் பேராசிரியர் மருத்துவர் கிருஷ்ணசுந்தரி தலைமையிலான மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் சேர்க்கப்பட்டார்.</p>
<p>பரிசோதனைகளில், பரமேஸ்வரிக்கு "Bilateral Choanal Atresia – Bony Type" எனப்படும் அரிய பிறவிக்குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், மூக்கின் பின்பகுதி எலும்பு முழுவதும் அடைந்து இருப்பதால் சுவாசிப்பதில் கடும் சிரமம் ஏற்படும். இந்த நோய் பெரியவர்களிடம் காண்பது மிக அரிது என்பதும், கர்ப்பிணி பெண்ணிடம் இது கண்டறியப்பட்டது முதல் முறை என்பதும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.</p>
<p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/24/e42ae84bde50a2328a00f0e1f1300a551782309216234113_original.jpg" width="720" /></p>
<p>உடனடியாக மகப்பேறு மருத்துவர், ஸ்கேன் நிபுணர்கள் மற்றும் மயக்க மருத்துவர் ஆகியோருடன் ஆலோசித்து, ‘High Risk Case’ ஆக கருதி அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நாசல் எண்டோஸ்கோப், நவீன நாசல் மைக்ரோ டிரில் மற்றும் மைக்ரோ டெப்ரைடர் கருவிகளை பயன்படுத்தி, வெளிப்புறத்தில் எந்த தழும்பும் இல்லாமல் மிக நுணுக்கமான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை மூலம் மூக்கில் சுவாசிப்பதை சீராக்கப்பட்டு, பரமேஸ்வரி தற்போது நலமாக உள்ளார்.</p>
<p>இந்த அறுவை சிகிச்சை சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது குழந்தை பிறந்துள்ள நிலையில் தாயும், குழந்தையும் பாதுகாப்பாக உள்ளனர். மேலும், கர்ப்பிணி பெண்ணுக்கு இவ்வாறு அறுவை சிகிச்சை செய்து தாய் மற்றும் குழந்தை இருவரையும் காப்பாற்றிய சம்பவம் தமிழகத்தில் முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>இந்த அரிய சாதனையை நிகழ்த்திய ENT மருத்துவக் குழுவினருக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/check-these-10-points-before-buying-an-electric-vehicle-264992" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article