
<h3><strong>பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த நபர்</strong></h3>
<p>சென்னை புழல் பகுதியில் வசித்து வரும் 31 வயது பெண்ணை கடந்த 15.06.2026 அன்று ஒரு நபர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உனது கணவரை பற்றி நேரில் பேச வேண்டும் என்று கூறிய போது , அப்பெண்மணி தனது கணவருக்கு என்ன ஆனதோ என பயந்து வியாசர்பாடி , பஸ் டிப்போ அருகில் இருப்பதாக சொன்ன போது அந்த நபர் நேரில் வருவதாக கூறியுள்ளார்.</p>
<p>சிறிது நேரத்தில் அங்கு ஆட்டோவில் வந்த ஒரு நபர் , உனது கணவர் மற்றும் உனது குடும்பத்தையும் தெரியும் எனக் கூறி அப்பெண்ணை தகாத உறவுக்கு அழைத்துள்ளார். அந்தப் பெண் சத்தம் போட்டு விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.</p>
<p>இந்நிலையில் கடந்த 18.06.2026 அன்று காலை பெண் காவாங்கரை பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த போது, அங்கு ஆட்டோவில் வந்த அதே நபர் மீண்டும் அப்பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் பேசி அப்பெண்ணின் கையை பிடித்து தகாத முறையில் நடந்த போது அப்பெண் சத்தம் போடவே அந்த நபர் ஆட்டோவில் தப்பிச் சென்றுள்ளார்.</p>
<h3><strong>செல்போன் - ஆட்டோ பறிமுதல்</strong></h3>
<p>தப்பி சென்ற நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட பெண் புழல் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.</p>
<p>புழல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்த ராஜேஷ் (எ) ராஜேஸ்வரன் (வயது 33 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய செல்போன் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.</p>
<p>மேலும் விசாரணையில் ராஜேஸ்வரன் மீது ஏற்கனவே 5 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ராஜேஸ்வரன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்</p>
Source: Read Full Article