
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலையோர உணவகங்களில் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து உரிய கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.</p>
<p style="text-align: justify;"><strong>போக்குவரத்து பெருக்கமும் உணவகங்களின் வளர்ச்சியும்</strong></p>
<p style="text-align: justify;">சுற்றுலா, ஆன்மீகம் மற்றும் விவசாய வளம் நிறைந்த தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் அண்மைக்காலமாக சாலைக் கட்டமைப்பு வசதிகள் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள், புறவழிச்சாலைகள் விரிவாக்கப்பட்டதன் காரணமாக, வாகனப் போக்குவரத்தும், பயணிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">இதனால் முக்கிய சாலைகளில் சிறிய உணவகங்கள், தள்ளுவண்டி கடைகள், தற்காலிக டிபன் மையங்கள், பிரியாணி மற்றும் கிரில் சிக்கன், ஷவர்மா, பரோட்டா போன்ற அசைவ உணவகங்கள் அதிவேகமாகப் பெருகி வருகின்றன. குறிப்பாக, மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை பல இடங்களில் இத்தகைய தற்காலிக உணவுக் கடைகள் வரிசையாக இயங்கி வருகின்றன.</p>
<p style="text-align: justify;"><strong>மக்கள் ஆதரவும் எழுந்துள்ள சந்தேகங்களும்</strong></p>
<p style="text-align: justify;">தஞ்சை–திருச்சி, தஞ்சை–நாகப்பட்டினம், தஞ்சை–கும்பகோணம், திருவாரூர்–மயிலாடுதுறை உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் இந்த உணவகங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. லாரி ஓட்டுநர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடும்பத்துடன் பயணிப்பவர்கள் என ஏராளமானோர் இக்கடைகளையே நம்பியுள்ளனர். குறைந்த விலை, உடனடியாகக் கிடைக்கும் உணவு, இரவு நேரத்திலும் செயல்படுவது மற்றும் வாகனங்களை எளிதாக நிறுத்திச் செல்லும் வசதி போன்ற காரணங்களால் இவற்றின் வரவேற்பு அதிகரித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">இருப்பினும், இந்த உணவகங்களில் சுவை மிகுதியாக இருந்தாலும், அவை பாதுகாப்பானதாக உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, அசைவ உணவகங்களில் பயன்படுத்தப்படும் இறைச்சிகள் தரமானவையா, மீதமான உணவுகள் மீண்டும் சூடாக்கி விற்கப்படுகிறதா, பயன்படுத்திய சமையல் எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறதா போன்ற பல்வேறு சந்தேகங்களை நுகர்வோர் எழுப்புகின்றனர்.</p>
<p style="text-align: justify;"><strong>திறந்த வெளியில் சமையல்... தூய்மையற்ற சூழல்</strong></p>
<p style="text-align: justify;">பல சாலையோர உணவகங்களில் திறந்தவெளியில் சமையல் நடைபெறுவதால், வாகனங்கள் செல்லும்போது எழும் தூசி உணவின் மீது படுகிறது. மேலும், ஈக்கள் மொய்க்கும் சூழலில் உணவுப் பொருட்கள் திறந்த நிலையில் வைக்கப்படுவதோடு, கைகளை கழுவ போதிய வசதி இல்லாதது, பாத்திரங்கள் சுத்தமின்றி இருப்பது, கழிவுநீர் முறையாக அகற்றப்படாதது போன்ற குறைபாடுகளும் பரவலாகக் காணப்படுகின்றன. சமையல் மாஸ்டர்கள் மற்றும் பணியாளர்கள் கையுறை, தலைக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை பெரும்பாலான இடங்களில் பயன்படுத்துவதில்லை.</p>
<p style="text-align: justify;">எனவே, உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து திடீர் ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறும் கடைகளுக்கு அபராதம் மற்றும் உரிமம் ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.</p>
<p style="text-align: justify;"><strong>மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி தகவல்</strong></p>
<p style="text-align: justify;">இதுகுறித்து தஞ்சை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதா கூறியதாவது: "தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் ஓட்டல்கள், சிற்றுண்டிக் கடைகள் உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன. தற்போது தெருவோர உணவகங்கள் குறித்தும் மாவட்டம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.</p>
<p style="text-align: justify;">இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில், சாலையோர உணவக உரிமையாளர்களை அழைத்து, உணவை சுகாதாரமாக தயாரிப்பது, தரமான மூலப்பொருட்களைப் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர்களைக் கொண்டு இலவச பயிற்சி அளித்து வருகிறோம். இதுவரை 200-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி வழங்கப்பட்டு, சான்றிதழ்களும், இலவசமாக உரிமம் (லைசென்ஸ்) பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p>
<p style="text-align: justify;">இந்த மாத இறுதியில் கும்பகோணத்திலும், அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தெருவோர உணவக உரிமையாளர்களுக்கு இத்தகைய பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன. அதேசமயம், மாவட்டம் முழுவதும் உணவகங்களில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p>
Source: Read Full Article