
<div dir="auto">சிவகங்கை மாவட்டம்mமலேரியா முற்றிலும் ஒழிக்கப்பட்ட மாவட்டமாக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு மத்திய சுகாதார குழுவினர் மூன்று நாட்கள் தீவிர ஆய்வு-மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>மலேரியா இல்லாத மாவட்டம்</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்தை மலேரியா இல்லாத மாவட்டமாக அறிவிக்கும் வகையில் 11.06.2026 முதல் 13.06.2026 வரை மத்திய சுகாதார குழுவினர் மூன்று நாட்கள் தீவிர ஆய்வு செய்தனர்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>மலேரியா நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்...," சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டில் பரவும் மலேரியா பாதிப்புகள் இல்லாத சூழ்நிலையில் சிவகங்கை மாவட்டம் "மலேரியா இல்லாத மாவட்டம் என்ற வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது". தேசிய பூச்சிவழி பரவும் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (NVBDC) அடிப்படையில் மலேரியா ஒழிப்பு இலக்கான மலேரியா நோய் பரவுவதைத் தடுக்கும் பணிகள் சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட மலேரியா ஒழிப்பு நிலையை அதிகாரப்பூர்வமாகச் சான்றளிப்பதற்காக இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் உயர்நிலைக் குழுவினர் மாநில அளவில் மலேரியா நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை மாவட்டம் வாரியாக களஆய்வு செய்வதற்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த உலக சுகாதார நிறுவன மண்டல ஒருங்கிணைப்பாளர் மரு.நிஷிதா ரஞ்சன் தாஸ், ஓடிசா மாநிலத்தை சேர்ந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, ஆராய்ச்சியாளர், முனைவர்.அஞ்சு விஸ்வான், தமிழ்நாடு முன்னாள் முதன்மை பூச்சியியல் வல்லுனர், முனைவர்.ஸ்ரீதரன் சுப்பிரமணியன் மற்றும் ஜார்க்கண்ட் மாநில மாவட்ட மலேரியா அலுவலர், மரு.ரேகா குமாரி ஆகிய வல்லுனர்கள் குழு சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்தனர்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>முதல்கட்ட ஆலோசனை</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">முன்னதாக, 11.06.2026 அன்று மத்திய சுகாதார குழுவினர், மாவட்ட சுகாதார அலுவலருடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களைச் சந்தித்து ஆய்வுகள் குறித்து முதல்கட்ட ஆலோசனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள் மற்றும் பொது மக்களின் இருப்பிடங்களுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டனர். மத்திய சுகாதார குழுவினருடன் மாவட்ட சுகாதார அலுவலர் (பொறுப்பு) மரு.பா.இந்திரா, மாவட்ட இரண்டாம் நிலை அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் உடன் இருந்தனர். மத்திய சுகாதாரக் குழுவினரின் இந்தக் கள ஆய்வின் விரிவான இறுதி அறிக்கையின் அடிப்படையில் மாநிலத்தில் மலேரியா முற்றிலும் ஒழிக்கப்பட்ட மாவட்டமாக சிவகங்கை மாவட்டம் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.</div>
Source: Read Full Article