
<p><strong>Vaibhav Sooryavanshi IND Vs SL:</strong> முத்தரப்பு தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில், 20 ஆண்டுகளாக நீடித்து வந்த சாதனையை இந்திய வீரர் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.</p>
<h2><strong>உலக சாதனையை முறியடித்த சூர்யவன்ஷி</strong></h2>
<p>இந்தியா, இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஏ அணிகள் பங்கேற்ற முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டி, தம்புலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியான துவக்கத்தை அமைத்து கொடுத்துள்ளனர். குறிப்பாக 8 ஓவர்கள் முடிவிலேயே 123 ரன்களை குவித்துள்ளது. அதிலும் சூர்யவன்ஷி வெறும் 11 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன் மூலம் லிஸ்ட் ஏ போட்டிகளில் கடந்த 20 வருடங்களாக நீடித்து வந்த சாதனையை 15 வயது சிறுவன் தகர்த்து எறிந்துள்ளார். முன்னதாக கடந்த 2005ம் ஆண்டு ராகமா கிரிக்கெட் க்ளப்பை சேர்ந்த வீரரத்னே, குருநெகலா யூத் கிரிக்கெட் க்ளப்பிற்கு எதிரான போட்டியில் 12 பந்துகளில் அரைசதம் கடந்ததே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கொழும்புவில் உள்ள தர்ஷ்டன் கல்லூரி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/most-cheapest-5-bikes-hero-hf-bajaj-ct-110x-details-in-pics-264589" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<h2><strong>அட்டகாசமான அரைசதம்:</strong></h2>
<p>லீக் சுற்றில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்த நிலையில், இறுதிப்போட்டியின் முதல் பந்து முதலே சூர்யவன்ஷி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முகமது ஷிராசின் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இவர் வீசிய இரண்டாவது ஓவரில் 3 சிக்சர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகளை விளாசி 26 ரன்களை குவித்து இலங்கை வீரர்களை வாயடைக்கச் செய்தார். தொடர்ந்து போட்டியில் தனது ஐந்தவாது சிக்சரை விளாசி அட்டகாசமான முறையில் வெறும் 11 பந்துகளிலேயே தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து வேகத்தை குறைக்காமல் ஆடி வந்த சூர்யவன்ஷி 29 பந்துகளில் 94 ரன்களை குவித்து இருந்த போது அராச்சிகே பந்துவீச்சில் வியாஷ்காந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் வெறும் ஆறு ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். இந்த பட்டாசான இன்னிங்ஸில் அவர் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.</p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/X9SwfZMX02E?si=fO_jm_3EWeBkjXCt" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>பதிலடி தந்த சூர்யவன்ஷி</strong></h2>
<p>முன்னதாக லீக் சுற்றின் போது இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து அந்த போட்டி சூப்பர் ஓவருக்கு சென்ற நிலையில், எதிர்பாராத விதமாக 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. அப்போது ஆடுகளத்தில் இருந்து வெளியேறிய சூர்ய்வன்ஷியை நோக்கி, இலங்கை வீரர்கள் கிண்டலடித்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த சூர்யவன்ஷி, இலங்கை வீரர் ஒருவரின் சட்டையை பிடித்து இழுக்க அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. உடனடியாக களத்தில் இருந்த நடுவர்கள் வீரர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அங்கு இயல்பு நிலை திரும்பியது. அந்த சம்பவத்திற்கு பதிலடி தரும் விதமாக முக்கியமான இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கான அதிரடியான தொடக்கத்தை கொடுத்து, சூர்யவன்ஷி அதகளப்படுத்தியுள்ளார்.</p>
Source: Read Full Article