
<p style="text-align: justify;"><strong>மயிலாடுதுறை: </strong>கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக அரசைக் கண்டித்தும், தங்களின் தன்னெழுச்சியான வாழ்வாதாரப் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவதாகக் கூறி மடைமாற்ற முயலும் அமைச்சர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து விவசாயிகள், அலுவலக நுழைவாயில் முன்பு திரண்டு தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<h3 style="text-align: justify;">காற்றில் பறக்கவிடப்பட்ட தேர்தல் வாக்குறுதி - விவசாயிகள் குற்றச்சாட்டு </h3>
<p style="text-align: justify;">நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தமிழகத்தில் தாங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தால் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் அனைத்தும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று தற்போதைய ஆளுங்கட்சி பிரதான வாக்குறுதியை அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று விவசாயப் பணிகளை மேற்கொண்டனர். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். </p>
<p style="text-align: justify;">கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக, புதிய நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. அதன்படி, ரூபாய் 70,000 வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே 100 விழுக்காடு (முழுமையான) கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">ரூபாய் 70,000-க்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு, எவ்வளவு தொகையாக இருந்தாலும் வெறும் ரூபாய் 35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று இரண்டாவது முறையாக விதிகளை மாற்றி அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த திடீர் மாற்றமும், ஏமாற்றமும் டெல்டா மாவட்ட விவசாயிகள் உட்பட ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளிடையேயும் அதிர்ச்சியையும், கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. </p>
<p style="text-align: justify;">நடுத்தர மற்றும் பெரிய அளவில் விவசாயம் செய்து, அதிக கடன் சுமையால் தவித்து வரும் தங்களுக்கு இந்த அறிவிப்பு எவ்வித பலனையும் அளிக்கவில்லை என்று அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.</p>
<h3 style="text-align: justify;">அமைச்சர்களின் கருத்துக்குக் கடும் கண்டனம்</h3>
<p style="text-align: justify;">இந்த பகுதித் தள்ளுபடி அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு கட்டங்களாகத் தொடர் போராட்டங்களை, எவ்வித அரசியல் சார்புமின்றி தன்னெழுச்சியாக நடத்தி வருகின்றனர். இயற்கை சீற்றங்கள், உர விலை உயர்வு, ஆள் கூலி அதிகரிப்பு போன்ற காரணங்களால் நஷ்டத்தைச் சந்தித்து வரும் நிலையில், கடன் தள்ளுபடி மட்டுமே தங்களைக் காக்கும் ஒரே வழி என்பது விவசாயிகளின் நிலைப்பாடாகும்.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில், விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கைகளை முறைப்படி பரிசீலித்து தீர்வு காண்பதற்குப் பதிலாக, தமிழக அமைச்சர்கள் சிலர் பொதுவெளியில் பேசி வரும் கருத்துக்கள் விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. </p>
<p style="text-align: justify;">"விவசாயிகள் தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில் போராடவில்லை; எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரிலேயே இந்த போராட்டங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன" என்று அமைச்சர்கள் தொடர்ந்து மடைமாற்றி பேசி வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">அமைச்சர்களின் இந்த பொறுப்பற்ற பேச்சானது, தங்களின் வாழ்வாதாரப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும், உண்மையானப் பிரச்சினையை திசைதிருப்பும் மலிவான அரசியல் உத்தி என்றும் விவசாயிகள் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆவேசமாகத் தெரிவித்தனர்.</p>
<h3 style="text-align: justify;">குறைதீர் கூட்டத்தில் அரங்கேறிய பரபரப்பு </h3>
<p style="text-align: justify;">மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வழக்கம் போல் தொடங்கியது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான விவசாய சங்கப் பிரதிநிதிகளும், சுயேச்சை விவசாயிகளும் கலந்துகொண்டனர்.</p>
<p style="text-align: justify;">கூட்டம் தொடங்கிய உடனே, விவசாய சங்கத் தலைவர்கள் எழுந்து நின்று, கூட்டுறவு கடன் தள்ளுபடி விவகாரம் மற்றும் அமைச்சர்களின் அவதூறு பேச்சு குறித்து அவசரத் தீர்மானமாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், மாவட்ட நிர்வாகத் தரப்பில், நிகழ்ச்சி நிரலின்படி விவசாயப் பிரச்சினைகள் குறித்துப் பேசும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள், விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறி, ஒருமனதாகக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.</p>
<p style="text-align: justify;">அடுத்த சில நிமிடங்களில், கூட்டரங்கில் இருந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளும் தங்களது துண்டுகளை கைகளில் ஏந்தியபடி, தமிழக அரசுக்கு எதிரான முழக்கங்களுடன் கூட்ட அரங்கை விட்டு வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தினர்.</p>
<h3 style="text-align: justify;">ஆட்சியர் அலுவலக வாயிலில் எச்சரிக்கை போராட்டம் </h3>
<p style="text-align: justify;">கூட்டத்தைப் புறக்கணித்து வெளியே வந்த விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பிரதான நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு தமிழக அரசை கண்டிக்கும் வகையில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.</p>
<p style="text-align: justify;">"அரசே ஏமாற்றாதே, விவசாயிகளை ஏமாற்றாதே!", "தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று?", "அமைச்சர்களே விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாதே!" போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.</p>
<p style="text-align: justify;">ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறுகையில்; "நாங்கள் எந்த அரசியல் கட்சியின் தூண்டுதலாலும் இங்கு வரவில்லை. கடனில் மூழ்கி தவிக்கும் எங்கள் குடும்பங்களைக் காப்பாற்றவே வீதிக்கு வந்து போராடுகிறோம். தமிழக அரசு உடனடியாகத் தனது இரண்டாவது உத்தரவைத் திரும்பப் பெற்று, கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி 100% முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதை விடுத்து, எங்களின் நியாயமானப் போராட்டத்தை எதிர்க்கட்சிகளின் தூண்டுதல் என்று அமைச்சர்கள் தொடர்ந்து திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டால், வரும் நாட்களில் மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமன்றி, தமிழகம் தழுவிய அளவில் அனைத்து அரசு அலுவலகங்களையும் முடக்கும் தொடர் போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுப்பார்கள்." என எச்சரிக்கை விடுத்து, இறுதியில், விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.</p>
<p style="text-align: justify;">விவசாயிகளின் இந்த அதிரடி கூட்டப் புறக்கணிப்பு மற்றும் நுழைவாயில் ஆர்ப்பாட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.</p>
Source: Read Full Article