
<p>கோவை மாவட்டத்தைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவி ஒருவர் நீட் மறுதேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>
<p>சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர் - புவனேஸ்வரி தம்பதியரின் மகள் கோபிகா (19). சேலம் கோட்டை அரசு பள்ளியில் பயின்று 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 440 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மருத்துவராக வேண்டும் என்ற இலக்குடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் இரண்டு முறை நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால், மீண்டும் தேர்வுக்காக தயாராகி வந்ததாக தெரிகிறது.</p>
<p>சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி அருகே வெள்ளாளபுரம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்த கோபிகா, நாளை மறுதினம் நடைபெறவிருந்த நீட் மறுதேர்வை எழுத இருந்தார்.</p>
<h2><strong>தூக்கிட்டு தற்கொலை</strong></h2>
<p>தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சம் மற்றும் மன அழுத்தம் காரணமாக இன்று பாட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.</p>
<p>இதுகுறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
<p>இதுகுறித்து மாணவியின் தந்தை சேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் ஞாயிற்றுக்கிழமை விநாயகா மிஷன்ஸ் கல்லூரியில் நடைபெறவிருந்த நீட் மறுதேர்வை எழுதுவதற்காக மகள் பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார். தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால் நேரில் சென்று பார்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.</p>
<p>கடந்த முறை நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தாலும், இந்த முறை கண்டிப்பாக தேர்ச்சி பெறுவேன் என்று நம்பிக்கையுடன் கூறியிருந்தார். தேர்வில் வெற்றி பெறாவிட்டாலும் மாற்று கல்வி வாய்ப்புகளுக்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தேன். ஆனால் அதற்குள் இந்த முடிவை எடுத்துவிட்டார்.</p>
<h2><strong>2 நாட்களுக்கு முன்னாள் பிறந்தநாள்</strong></h2>
<p>நீட் தேர்வு காரணமாக ஏற்கனவே பல மாணவர்கள் உயிரிழந்த சம்பவங்களை செய்திகளில் பார்த்திருக்கிறோம். எனது மகளையும் மிகவும் கவனமாக பார்த்து வந்தோம். இரண்டு நாட்களுக்கு முன்புதான் தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார். ஆனால் ஒரு நொடியில் எடுத்த தவறான முடிவு எங்கள் குடும்பத்தையே நிலைகுலையச் செய்துவிட்டது என்றார்.</p>
<p> மேலும், நீட் தேர்வு தொடர்பாக அரசே உரிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், தனது துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்றும் அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.</p>
<p>அண்மையில் கோவையில் அனு கீர்த்தனா என்னும் மாணவி நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/all-these-problems-can-occur-if-you-suddenly-stop-drinking-264412" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article