
<p style="text-align: justify;">இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்காக இந்திய ரயில்வே நெட்வொர்க் திகழ்கிறது. ரயில்களில் பயணம் செய்யக்கூடிய மக்கள் தங்களுக்கு தேவையான ரயில் டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட் ஆகியவற்றை ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது. தற்போது 88 சதவீத ரயில் டிக்கெட் ஆன்லைன் தளங்கள் வாயிலாக தான் முன்பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையில் ரயில் பயணிகளிடம் மிகவும் பிரபலமானது IRCTC இணையதளம்.</p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/12/cad05224772a98d1bce371deda89ead91781242587815193_original.jpg" /></p>
<p style="text-align: justify;">IRCTC இணையதளம் பெரிய அளவில் மாற்றப்பட இருக்கிறது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதன் படி அடுத்த மாதத்தில் இருந்து புதிதாக IRCTC இணையதளம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜூலை 15 முதல் புதிய IRCTC இணையதளம் பயன்பாட்டுக்கு வரும் என கூறினார். பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தக்கூடிய வகையிலும் நவீன தொழில்நுட்பங்கள் கொண்டதாகவும் இந்த புதிய IRCTC இணையதளம் இருக்கும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">வேகமானதாகவும் எளிமையாக மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையிலும், புதிய IRCTC இணையதளத்தில் வசதிகள் கொண்டுவரப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். ஏற்கனவே ரயில்வே துறை அமைச்சகம் 40 ஆண்டுகால பயணிகள் முன்பதிவு அமைப்பான Passenger Reservation System எனப்படும் PRS அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 1986ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் கடந்த 40 ஆண்டுகளில் அவ்வப்போது சிறு சிறு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டன. தற்போது, ஆன்லைனில் டிக்கெட் புக் செய்பவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது, நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, ஏஐ வருகை ஆகிய காரணங்களால் Passenger Reservation System முழுவதுமாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் முதல் படிப்படியாக அமலுக்கு வர உள்ளது.</p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/12/b44ee99f017b8ed38189b0f69cf78f761781242555652193_original.jpg" /></p>
<p style="text-align: justify;">இந்த நவீன முன்பதிவு அமைப்பின் மிகப்பெரிய சிறப்பம்சமே AI தொழில்நுட்ப பயன்பாடு தான். இதன் மூலம் உங்களது வெயிட்டிங் லிஸ்ட் (Waiting List) டிக்கெட் கன்பார்ம் ஆகுமா ஆகாதா என்பதை மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும். முன்னதாக இதன் துல்லியம் 53% ஆக மட்டுமே இருந்தது, ஆனால் தற்போது இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் 94% துல்லியமாக டிக்கெட் உறுதியாகும் வாய்ப்புகளை பயணிகள் தெரிந்துகொள்ளலாம். அதாவது டிக்கெட் பதிவு செய்துவிட்டு கன்ஃபார்ம் ஆகுமா இல்லையா என நொடிக்கு நொடி செக் செய்ய தேவையில்லை. தற்போது இந்தியாவில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களில் 88% பேர் ஆன்லைன் மூலமாகவே செய்கிறார்கள். நேரடியாக ரயில் நிலைய கவுண்ட்டர்களுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இந்த புதிய சிஸ்டம் நடைமுறைக்கு வரும் போது ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்னும் எளிமையாகும். டிக்கெட் பதிவு செய்யும் போதே அது உறுதியாகுமா இல்லையா என்பது உறுதியாக நமக்கு தெரிந்துவிடும்.</p>
<p style="text-align: justify;">கடந்த ஆண்டில் தான் இந்திய ரயில்வே 'RailOne' மொபைல் செயலியை அறிமுகம் செய்தது. ரயில்வே சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளையும் ரயில் ஒன் செயலி மூலமே பெற முடியும். தற்போதுள்ள பிஆர்எஸ் அமைப்பில் ஒரு நிமிடத்திற்கு 32 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் அது ஒரு நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகள் என மாற்றி அமைக்கப்பட இருக்கிறது. மேம்படுத்தப்பட்ட பி ஆர் எஸ் அமைப்பில் ஒரு நிமிடத்திற்கு 40 லட்சம் பேர் ரயில் டிக்கெட் தொடர்பான என்கொயரி மேற்கொள்ள முடியும். அது மட்டும் பல மொழிகளில் செயல்படும் வகையில் இது இருக்கும்.டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணிகள் தங்களுக்கு இருக்கைக்கான விருப்பங்களை வழங்கலாம் மேலும் எந்த தேதியில் எவ்வளவு டிக்கெட் கட்டணம் என்பன உங்கிட்ட தகவல்களும் காட்டும். மாணவர்கள், வயதானவர்கள் ,நோய் வாய் பட்டவர்கள் என பிரத்யேகமாக அவர்களுக்கு வேண்டிய இருக்கைகளை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகளும் இதில் கிடைக்கும்.</p>
Source: Read Full Article