
<p>தமிழக வெற்றிக் கழக அரசில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக உள்ளார் சரத்குமார். இவர், போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஒரு வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதற்கு விளக்கமளித்துள்ள அவர், தனது குடும்பத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் என்ன கூறியுள்ளார் என்பதை இப்போது பார்க்கலாம்.</p>
<h2>அமைச்சர் சரத்குமார் குறித்து வெளியான சர்ச்சை வீடியோ</h2>
<p>முன்னதாக, ஐபிஎல் போட்டி ஒன்றின் நடுவே, சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் கூறி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அதைத் தொடர்ந்து பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் சரத்குமார் அந்த வைரல் வீடியோவிற்கு விளக்கமளிக்கும் வகையில், தனது குடும்பத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p>
<h2>அமைச்சரின் விளக்கம் என்ன.?</h2>
<p>தனது மனைவி மற்றும் குழந்தையுடன் விளக்க வீடியோவை வெளியிட்டுள்ள அமைச்சர் சரத்குமார், காலையில், போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக நடந்த “போதையில்லா சமூகம்“ என்ற விழிப்புணர்வு மாரத்தானில் பங்கேற்றதாகவும், அந்த நிகழ்விற்கு சென்றுவந்த பிறகு, தன் மீது தவறான ஒரு தகவலை பரப்பி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.</p>
<p>தான், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, தனது குடும்பத்தினருடன் ஐபிஎல் போட்டி ஒன்றை காண்பதற்காக சென்றிருந்ததாகவும், அப்போது, தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவள் மாத்திரையை முழுங்க முடியாததால், அதை பொடிசெய்து தண்ணீரில் கலந்து கொடுப்பதற்காக, மாத்திரையை பொடி செய்ததாகவும், அப்போது எடுக்கப்பட்ட அந்த வீடியோவை வைத்து, அதை போதைப் பொருள் என தவறாக சித்தரித்து, இப்போது பரப்புகிறார்கள் என்றும் விளக்கமளித்துள்ளார்.</p>
<p>மேலும், விளையாட்டு மைதானத்தில், பலமான காவல்துறை பாதுகாப்பு, அவ்வளவு கூட்டம் இருக்கும்போது, அதிலும், தனக்கு முன்புறமும், பின்புறமும் ஏராளமானோர் அமைர்ந்திருக்கும் போது, எப்படி போதைப் பொருளை பயன்படுத்த முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p>மேலும், தற்போது அந்த வீடியோவை எடுத்து தவறாக பரப்பி வருவது தனக்கு மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ள அமைச்சர் சரத்குமார், இது போன்ற விஷயங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.</p>
<p><iframe title="Minister Sarath | "நான் DRUGS பயன்படுத்துனேனா?அது குழந்தையோட மாத்திரை”குடும்பத்தோடு VIDEO போட்ட சரத்" src="https://www.youtube.com/embed/0EwmpV_lX6g" width="696" height="391" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2>அமைச்சர் மனைவியும் விளக்கம்</h2>
<p>அவரைத் தொடர்ந்து, அவரது மனைவியும் அது குறித்து பேசியுள்ளார். தங்களுடைய குழந்தைக்கு ஒன்றரை வயது இருக்கும்போது அந்த நிகழ்வு நடந்ததாக அவர் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியை காணச் சென்றபோது, குழந்தைக்கு சற்று உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாகவும், அதற்காக மருத்துவர் மாத்திரை கொடுத்ததாகவும் கூறியுள்ள அவர், அதனை பொடி செய்து குழந்தைக்கு கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்த வீடியோ தான் இப்போது பரவி வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும், நல்ல விஷயங்களே இந்த காலத்தில் தவறாக கொண்டு சேர்க்கப்படுவதாகவும், இது போன்ற விஷயங்கள் பொதுமக்கள் கண்ணில் படும்போது, அது தவறாகத் தான் போய் சேரும் என்றும், அதற்கு விளக்கமளிக்க வேண்டியது தங்கள் கடமை என்றும் அமைச்சர் சரத்குமாரின் மனைவி தெரிவித்துள்ளார்.</p>
<p>தொடர்ந்து, இது போன்று அவதூறு பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும என்று அமைச்சர் சரத்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p> </p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/food/do-you-know-where-is-alphonso-mango-grown-in-india-264959" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article