40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த ரகசியம் இதுதான்! - திராவிட பொங்கல் விளையாட்டு விழாவில் இளைஞர்களுக்கு ஊக்கம்!
தோல்வி என்பது நிரந்தரமானது அல்ல; எங்கே தவறு செய்தோம் என்று ஆராய்ந்து செயல்பட்டால், வீழ்ந்த இடத்திலிருந்தே மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திமுக சார்பில் ‘திராவிட பொங்கல்’ மாபெரும் கிரிக்கெட் மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றன. இந்த விளையாட்டுத் திருவிழாவில் வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசு கோப்பைகள் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கிப் பேசிய அமைச்சர், தனது அரசியல் வாழ்வின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
பந்தல்குடியில் நடைபெற்ற கபடி போட்டிகள் மற்றும் எஸ்.பி.கே பள்ளி மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுத் திறமையை வெளிப்படுத்தின. வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளை வழங்கிய பின் பேசிய அமைச்சர், "இந்தியாவிலேயே அதிகம் படித்தவர்கள் உள்ள மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்பதே முதலமைச்சரின் இலக்கு. ஒடுக்கப்பட்ட மக்களை மேலே கொண்டு வந்தது திராவிட மாடல் ஆட்சிதான்" என்றார். செல்போன் பயன்பாடு குறித்து எச்சரித்த அவர், "நவீன காலத்தில் செல்போன் தேவைதான், ஆனால் அதில் வரும் அனைத்தையும் நம்பாமல் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்; கேள்வி கேட்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளுங்கள்" என அறிவுறுத்தினார்.
விளையாட்டு வீரர்களுக்குத் திமுக அரசு வழங்கி வரும் முன்னுரிமைகளைப் பட்டியலிட்ட அவர், தனது தோல்வியிலிருந்து கற்ற பாடத்தைப் பகிரும்போது அரங்கமே நிசப்தமானது. "தோல்வியைக் கண்டு துவண்டுவிடக் கூடாது. நான் ஒரு தேர்தலில் தோல்வியைத் தழுவியபோது, எங்கே கோட்டை விட்டேன் என்று ஆராய்ந்தேன். அந்தப் பாடத்தின் மூலம் அடுத்த தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றேன். எனவே, தோல்வி என்பது வெற்றியின் முதற்படி என்பதை உணர்ந்து இளைஞர்கள் முன்னேற வேண்டும்" என ஊக்கமளித்தார். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற கிரிக்கெட் அணிக்கு ₹25,000 மற்றும் கபடி அணிக்கு ₹20,000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தினர்.
