97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஒரு சதி! வாக்காளர் பட்டியல் குறித்து துணை முதல்வர் உதயநிதி எச்சரிக்கை!

2026-ல் 200-க்கும் மேற்பட்ட இடங்கள்; மீண்டும் திமுக ஆட்சி!  சைதாப்பேட்டையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சூளுரை!

தமிழகத்தின் மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் தேர்தலாக 2026 சட்டமன்றத் தேர்தல் அமையும்; மீண்டும் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி அரியணை ஏறும் எனத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

சைதாப்பேட்டை ஜாப்பர்கான்பேட்டையில் உள்ள கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில் பயிற்சி முடித்த பெண்களுக்குத் தையல் இயந்திரங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய அவர், தமிழக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டதுடன், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக நிலவும் அரசியல் சர்ச்சைகள் குறித்தும் தனது அனல் பறக்கும் கருத்துகளைப் பதிவு செய்தார்.

விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் தனது தொகுதியைச் சிறப்பாகக் கவனித்து வருகிறார்; மயிலாப்பூரிலிருந்து இத்தொகுதிக்கே குடிபெயர்ந்து விடலாமா என்று தோன்றும் அளவிற்கு இங்குப் பணிகள் செழுமையாக உள்ளன" எனப் புகழ்ந்தார். தொடர்ந்து மகளிர் நலத் திட்டங்கள் குறித்துப் பேசுகையில், "மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் எண்ணிக்கை 1.30 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி, காலை உணவுத் திட்டம் எனத் திராவிட மாடல் அரசு கல்விக்கும் பெண்ணுரிமைக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இன்று புத்தகங்களோடு மடிக்கணினிகளையும் பெண்கள் ஏந்தியிருப்பதே தந்தை பெரியாரின் கனவு நனவானதற்கான சாட்சி" என்றார். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களைச் சென்னையின் 'கூகுள் மேப்ஸ்' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

ஒன்றிய அரசு குறித்த தனது உரையில் காரசாரமாகப் பேசிய அவர், "மத்திய பாஜக அரசு புதிய கல்விக் கொள்கை (NEP) மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிக்க முயல்கிறது; தமிழகத்திற்கு வர வேண்டிய 2,500 கோடி கல்வி நிதியை முடக்கி வஞ்சிக்கிறது" எனக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள விவகாரத்தைச் சுட்டிக்காட்டிய அவர், "இதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரே குறிவைக்கப்பட்டுள்ளனர்; பொதுமக்கள் அனைவரும் ஜனவரி 18-ஆம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார். இந்த அநீதிகளை முறியடிக்கவும், மாநில உரிமைகளை மீட்கவும் 2026 தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற அனைவரும் இப்போதிலிருந்தே பாடுபட வேண்டும் என அவர் முழக்கமிட்டார்.


புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks