மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டி; 17-ல் இமானுவேல் சேகரன் மணிண்டபத்தை முதல்வர் திறக்கிறார்! செயற்குழுவில் பேச்சு!
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோர் திமுக கூட்டணியில் இணைவதற்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபத் திறப்பு விழா மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை குறித்த திமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் கூட்டணி வியூகங்கள் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த ரகசியங்களை உடைத்துப் பேசினார்.
பரமக்குடியில் ₹3 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை, வரும் ஜனவரி 17-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், "தேர்தல் நெருங்குவதால் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. ராமதாஸ் மற்றும் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் திமுக கூட்டணிக்கு வரப் பேச்சு நடத்தி வருகின்றனர்" என்றார். மேலும், "மதிமுக இந்தத் தேர்தலிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்; விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் எங்கள் கூட்டணியில் தொடர்வது உறுதி" எனத் தெரிவித்தார்.
கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், "உழைப்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் மரியாதை கிடைக்கும்; எஸ்.ஐ.ஆர் (SIR) பணிகளில் திமுகவினர் காட்டிய வேகத்தைத் தேர்தல் பணிகளிலும் காட்ட வேண்டும். வேட்பாளராகக் கட்சி யாரை நிறுத்தினாலும், அவர்களை வெற்றி பெறச் செய்யக் கடுமையாக உழைக்க வேண்டும்" என வலியுறுத்தினார். இந்தச் செயற்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ முருகேசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். அமைச்சரின் இந்தத் திடீர் அறிவிப்பு, குறிப்பாகப் ராமதாஸ் மற்றும் ஜான் பாண்டியன் குறித்த தகவல், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
