போலீசாரின் அத்துமீறல்; 800 கோடி ஊழல்! தமிழக அரசை நோக்கி அடுக்கடுக்கான புகார்களை வீசிய நிர்வாகிகள்!
மருந்து வணிகர்களின் கோரிக்கைகளைத் தமிழக அரசு நிறைவேற்றத் தவறினால், வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 24 மணி நேரக் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் எனத் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
நாமக்கல்லில் இன்று நடைபெற்ற அந்தச் சங்கத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த மாநில பொதுச்செயலாளர் செல்வன், மருந்து கட்டுப்பாட்டுத் துறையில் நடக்கும் ஊழல்கள், போலீசாரின் சட்டவிரோத ஆய்வுகள் மற்றும் நில அபகரிப்பு விவகாரங்கள் எனப் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டார். 40,000 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சங்கத்தின் இந்த அதிரடி முடிவு, தமிழகத்தின் சுகாதார சேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில பொதுச்செயலாளர் செல்வன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் (பொறுப்பு) நரசிம்மன் மற்றும் பொருளாளர் அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்வன், "தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பதற்குப் போலீசாரின் மெத்தனப் போக்கே காரணம். ஆனால், தங்கள் தோல்வியை மறைக்க, மருந்து கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறி போலீசார் மருந்து கடைகளில் அத்துமீறி ஆய்வு நடத்தி எங்களை அச்சுறுத்துகின்றனர். இதனை ஒருபோதும் ஏற்க முடியாது" என வன்மையாகக் கண்டித்தார். இது குறித்து முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளதாகவும், தீர்வு கிடைக்காவிட்டால் பிப்ரவரி 15-ல் மாநிலம் தழுவிய கடையடைப்பு மற்றும் முதல்வர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு மெடிக்கல் சப்ளை கார்ப்பரேஷனில் (TNMSC) சுமார் ₹800 கோடி அளவிற்கு மருந்து கொள்முதல் ஊழல் நடந்துள்ளதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். "குறைந்த விலை மருந்துகளை மிக அதிக விலைக்குக் கொள்முதல் செய்து மக்கள் வரிப்பணம் சூறையாடப்படுகிறது" என்றார். மேலும், சென்னை துரைப்பாக்கத்தில் மருந்து வணிகர்களுக்குச் சொந்தமான ₹700 கோடி மதிப்புள்ள 4.78 ஏக்கர் நிலத்தை முன்னாள் நிர்வாகிகள் நில அபகரிப்பு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார். ஆன்லைன் மூலம் இளைஞர்கள் போதை தரும் மாத்திரைகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், மருந்து வணிகர்கள் சட்டத்திற்கு உட்பட்டே செயல்படுவதாகத் தெளிவுபடுத்தினார்.
