
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க சமுத்திரம் ஏரி தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் நிலையில், கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காலதாமதமின்றி ஏரியை போர்க்கால அடிப்படையில் முழு கொள்ளளவுக்கு நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">தஞ்சாவூர் நகரில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சமுத்திரம் ஏரி, ஒரு காலத்தில் கடல் போல் பரந்து விரிந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஏரியில் தண்ணீர் இல்லாததால், அதன் பழைய பிரமாண்ட தோற்றமே மாறிப்போய் வறண்ட நிலப்பரப்பாக காட்சியளிப்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p style="text-align: justify;"><strong>1,186 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு முக்கிய நீராதாரம்</strong></p>
<p style="text-align: justify;">சுமார் 287 ஏக்கர் பரப்பளவு கொண்ட சமுத்திரம் ஏரி மூலம் சுமார் 1,186 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதனால் சுற்றுவட்டார விவசாயிகளுக்கு இந்த ஏரி முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது.</p>
<p style="text-align: justify;">குறிப்பாக சாகுபடி பணிகள் நடைபெறும் காலங்களில் ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பது விவசாயத்திற்கு மிகவும் அவசியமானதாகும். ஆனால், தற்போதைய நிலையில் ஏரி வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;"><strong>கல்லணை கால்வாயில் தண்ணீர் ஓடும் நிலையில் ஏரி வறட்சி</strong></p>
<p style="text-align: justify;">மேட்டூர் அணையில் இருந்து கடந்த 1-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, கடந்த 6-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தின் கல்லணையை வந்தடைந்தது. இதையடுத்து கல்லணையில் இருந்து காவிரி, கல்லணை கால்வாய், வெண்ணாறு, வெட்டாறு, கொள்ளிடம், குடமுருட்டி உள்ளிட்ட பல்வேறு நீர்வழித்தடங்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் கடந்து கடைமடை பகுதிகளுக்கும் சென்றடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">ஆனால், கல்லணை கால்வாயில் தண்ணீர் போதுமான அளவில் சென்று கொண்டிருக்கும் நிலையிலும், சமுத்திரம் ஏரிக்கு இதுவரை தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படவில்லை என்பது விவசாயிகளின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. “கால்வாயில் தண்ணீர் இருக்கும்போதே ஏரியை நிரப்ப வேண்டும்; தண்ணீர் குறைந்த பிறகு நடவடிக்கை எடுப்பதால் எந்த பயனும் இல்லை” என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.</p>
<p style="text-align: justify;"><strong>நாயக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏரி</strong></p>
<p style="text-align: justify;">சமுத்திரம் ஏரி வரலாற்று சிறப்பு வாய்ந்த நீர்நிலையாகவும் கருதப்படுகிறது. நாயக்கர் காலத்தில் இந்த ஏரி வெட்டப்பட்டதாகவும், பின்னர் மராட்டியர் ஆட்சிக்காலத்தில் ஏரி புனரமைக்கப்பட்டதாகவும் வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மராட்டிய அரச குடும்பத்தினர் இந்த ஏரியில் படகில் பயணம் செய்து மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு காலத்தில் ஏரியில் கடல் போல் தண்ணீர் பரந்து கிடந்ததால், இது ‘சமுத்திரம் ஏரி’ என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.</p>
<p style="text-align: justify;">இந்த ஏரியின் பழைய தோற்றத்தை பதிவு செய்த ஓவியம் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்திலும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் அக்காலத்தில் தஞ்சாவூர் நகரில் இருந்து மாரியம்மன் கோவில் பகுதி வரை ஏரி பரந்து விரிந்திருந்த வரலாற்றுச் சிறப்பு தெரியவருகிறது.</p>
<p style="text-align: justify;"><strong>சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்ட சமுத்திரம் ஏரி</strong></p>
<p style="text-align: justify;">நாளடைவில் ஏரியின் பரப்பளவு சுருங்கிய நிலையில், இதனை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தஞ்சை பகுதி மக்களிடையே நீண்டகாலமாக இருந்து வந்தது. இதையடுத்து கல்லணை கால்வாய் கோட்ட பொதுப்பணித்துறை சார்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, சுமார் ரூ.9 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.</p>
<p style="text-align: justify;">ஏரியில் பறவைகள் தங்கி குஞ்சு பொரிக்கும் வகையில் 3 தீவுகள் உருவாக்கப்பட்டு, அங்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. பறவைகள் தங்குவதற்கான சூழலும் ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொழுதுபோக்கு மீன்பிடி பயிற்சித்தளம், சிறுவர் விளையாட்டுப் பூங்கா உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 40 கார்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால், மாலை நேரங்களில் குடும்பத்துடன் பொதுமக்கள் வந்து பொழுதை கழிக்கும் இடமாகவும் சமுத்திரம் ஏரி விளங்கி வருகிறது.</p>
<p style="text-align: justify;"><strong>தண்ணீர் வந்தால் விவசாயத்துக்கும் சுற்றுலாவுக்கும் புத்துயிர்</strong></p>
<p style="text-align: justify;">சமுத்திரம் ஏரி நீர்ப்பிடிப்பு மற்றும் பாசன முக்கியத்துவம் மட்டுமின்றி, பறவைகள் மற்றும் பல்வேறு தாவரங்களுக்கு வாழ்விடமாகவும் உள்ளது. ஏரியில் தண்ணீர் நிரம்பினால் சுற்றுச்சூழல் மேம்படுவதுடன், விவசாயத்துக்கும் தேவையான நீராதாரம் கிடைக்கும். எனவே, வரலாற்று சிறப்புமிக்க சமுத்திரம் ஏரியை வெறும் சுற்றுலாத்தலமாக மட்டும் பார்க்காமல், தஞ்சாவூர் பகுதியின் முக்கிய நீராதாரமாக கருதி பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.</p>
<p style="text-align: justify;"><strong>ஏரிக்கு பேருந்து நிறுத்தமும் வேண்டும்!</strong></p>
<p style="text-align: justify;">இதற்கிடையே, சமுத்திரம் ஏரியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்தியுள்ள நிலையில், அங்கு தனியாக பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது சமுத்திரம் ஏரிக்கு நேரடியாக பேருந்து நிறுத்தம் இல்லாததால், பொதுமக்கள் காட்டுத்தோட்டம் அல்லது மாரியம்மன் கோவில் பகுதியில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ மூலமாகவோ அல்லது நடந்தோ ஏரிக்கு செல்ல வேண்டியுள்ளது.</p>
<p style="text-align: justify;">குடும்பத்துடன் மாலை நேரங்களில் ஏரிக்கு வரும் பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் இதனால் சிரமப்படுகின்றனர். எனவே ஏரியின் அருகிலேயே பேருந்து நிறுத்தம் அமைத்து, பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">வரலாற்றை சுமந்து நிற்கும் சமுத்திரம் ஏரி... விவசாயத்துக்கு உயிர்நாடியாகவும், சுற்றுலாவுக்கு அழகாகவும் விளங்கும் இந்த ஏரியில் உடனடியாக தண்ணீர் நிரப்பி மீண்டும் பழைய பொலிவை ஏற்படுத்த வேண்டும் என்பதே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p>
Source: Read Full Article