
<p>மதுரை யாதவா கல்லூரியை நிர்வகித்து வரும் 'யாதவர் கல்வி நிதி சங்கத்தின் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு. தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.</p>
<p><strong>ரகசியமாகச் சேர்க்கப்பட்டு சங்கத்தின் வாக்காளர் கட்டமைப்பே மாற்றப்பட்டுள்ளது. </strong></p>
<p>மதுரை சேர்ந்த எஸ். விநாயகம் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு...," மதுரை திருப்பாலை பகுதியில் அமைந்துள்ள பிரபல யாதவர் கல்லூரியை நிர்வகித்து வரும் 'யாதவர் கல்வி நிதி' சங்கத்தின் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3, 2026 அன்று சுயசார்பு தேர்தல் அதிகாரிகளாகச் செயல்படும் கண்ணன், கார்த்திக் மற்றும் சந்தவாழியன் வெளியிட்ட தேர்தல் அறிவிப்பு முற்றிலும் விதிகளை மீறியது மற்றும் முறைகேடானது. ஆகஸ்ட் 2, 2026 அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் வெறும் 10 நிமிடங்களில் அவசர அவசரமாக முடித்துக் கொள்ளப்பட்டது. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர் மற்றும் பதிவுத்துறையின் அதிகாரி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தலைவரோ அல்லது துணைத் தலைவரோ தலைமை தாங்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் உறுப்பினர்களின் கையெழுத்துக்கள் காகிதங்களில் முறையற்ற முறையில் பெறப்பட்டுள்ளன. ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் கமிட்டி மூலம் நீக்கப்பட்ட 684 போலி உறுப்பினர்கள், புதிய விண்ணப்பங்கள் ஏதுமின்றி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், விதிகளை மீறி சுமார் 1,000 முதல் 2,000 புதிய உறுப்பினர்கள் ரகசியமாகச் சேர்க்கப்பட்டு சங்கத்தின் வாக்காளர் கட்டமைப்பே மாற்றப்பட்டுள்ளது. </p>
<p><strong>சட்டப்பூர்வ விதிகளின்படி நியாயமான முறையில் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்.</strong></p>
<p>55 ஆண்டு கால சங்க வரலாற்றில் இல்லாத வகையில், வேட்புமனுத் தாக்கலுக்கு ரூ. 10,000 கட்டணம் வசூலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியான வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 7 வரை முறைப்படி வெளியிடப்படவில்லை. எனவே ஆகஸ்ட் 29, 2026 அன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ள தேர்தல் நடைமுறைகள் மற்றும் ஆகஸ்ட் 3-ம் தேதியிட்ட தேர்தல் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். ஆகஸ்ட் 3-ம் தேதியிட்ட தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். பதிவுத்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் சட்டப்பூர்வ விதிகளின்படி நியாயமான முறையில் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.</p>
<p><strong>தேர்தலுக்கு இடைக்கால தடை</strong></p>
<p>இந்த மனு நீதிபதி விக்டோரியா கௌரி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏபி.ஜீவா ஆஜராகி முற்றிலும் முறைகேடாக தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். எதிர்மனுதாரர்கள் தரப்பில் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வரும் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து, உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.</p>
Source: Read Full Article