
<p><span dir="auto">இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நேற்று மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை</span><span dir="auto"> சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களை அதிபர் புதினிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். கிரெம்ளின் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த சந்திப்பின்போது, பல தசாப்தங்களாக ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவி வரும் உறவுகளின் நிலையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பயணம் பிரதிபலிக்கிறது என்று அதிபர் புதின் கூறினார். நெருக்கடியான காலங்களில் இந்தியாவிற்கு ஆதரவளிப்பதாக புதின் உறுதியளித்தார்.</span></p>
<h2><span dir="auto">ஒவ்வொரு ஆண்டும் வருவாய் அதிகரித்து வருகிறது</span></h2>
<p><span dir="auto">இந்தியா-ரஷ்ய வர்த்தகப் பரிவர்த்தனை அதிகரித்திருப்பது குறித்து பேசிய புதின், "இந்த ஆண்டு நமது வர்த்தகப் பரிவர்த்தனை அதிகரித்திருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஆண்டு அது சற்றுக் குறைந்தது. ஆனால், இந்த ஆண்டு அது அதிகரித்து வருகிறது. இதற்கு ஒரு பகுதிக் காரணமும், ஒருவேளை பெரும்பாலான காரணமும், ரஷ்யா-இந்தியா உறவுகளை மேம்படுத்துவதில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி வரும் பிரதமர் மோடியே ஆவார்," என்று கூறினார்.</span></p>
<p><span dir="auto">மேலும், "நமது உரையாடலின் தொடக்கத்தில், பிரதமர் மோடிக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கட்டமைப்பிற்குள் நாம் திட்டமிட்டிருந்தபடியே, மிக விரைவில் அவரைச் சந்திப்போம் என நம்புகிறேன். நமது கால அட்டவணைப்படி, இந்த ஆண்டு மீண்டும் நம்மால் சந்திக்க இயலும்." என்றும் அவர் தெரிவித்தார்.</span></p>
<h2><span dir="auto">“நெருக்கடியான நேரங்களில் உதவும்“</span></h2>
<p><span dir="auto">அதோடு, "பல பிரச்னைகள் உள்ளன. அவற்றில் ஒன்று, ஆற்றல் மட்டுமல்ல. அது நிச்சயமாக உர விநியோகமும் ஆகும். இந்திய விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் இந்த பிரச்னையைத் தீர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். இந்த விநியோகங்களை நாங்கள் அதிகரித்து வருகிறோம். மேலும், அவ்வாறு செய்யத் தயாராக இருக்கிறோம். அணுசக்தி தொடர்பான மற்ற அனைத்துப் பிரச்னைகள், உயர் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு மற்றும் பிற துறைகள் அனைத்தும் நிகழ்ச்சி நிரலில் உள்ளன. மேலும், இந்த அதிகரிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது." என்றும் ரஷ்ய அதிபர் புதின் கூறினார்.</span></p>
<p><span dir="auto">முன்னதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், "முதலில், பிரதமர் </span><span dir="auto">நரேந்திர மோடியின்</span><span dir="auto"> சார்பாக உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எனக்கு ஒரு அறிவுறுத்தலையும் செய்தியையும் வழங்கியுள்ளார். அதை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்," என்று கூறி தனது உரையை தொடங்கினார்.</span></p>
<p><span dir="auto">தொடர்ந்து, "இன்று காலை அரசுகளுக்கிடையேயான ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. நமது பொருளாதார ஒத்துழைப்பு, அணுசக்தி, உரங்கள் போன்றவை குறித்து உங்களுக்குத் தெரிவிப்பதற்கு என்னிடம் ஒரு மிகச் சிறந்த அறிக்கை உள்ளது. நான் அதைப்பற்றி விரிவாகப் பேசுவேன். நமது பொருளாதார ஒத்துழைப்பு பெருமளவு அதிகரித்துள்ளது என்பதையும் நான் கூற விரும்புகிறேன்." என்றும் அவர் தெரிவித்தார்.</span></p>
<h2><span dir="auto">“பிரதமருக்காகக் காத்திருக்கிறேன்“</span></h2>
<p><span dir="auto">தொடர்ந்து அவரது உரையாடல் குறித்து கூறிய டாக்டர் ஜெய்சங்கர், "பிரதமர் மோடி SCO உச்சிமாநாட்டில் உங்களை சந்திப்பதை ஆவலுடன் எதிர்நோக்குகிறார். மேலும், நீங்கள் BRICS உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு, இந்த வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள் என்றும் நம்புகிறார். நமக்கிடையே உண்மையிலேயே வலுவான இருதரப்பு ஒத்துழைப்பு உள்ளது. இந்த கௌரவத்திற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்." என்று தெரிவித்ததாக கூறினார்.</span></p>
<p><span dir="auto">இக்கூட்டத்தின்போது, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், டெனிஸ் மன்டுரோவ், ரஷ்ய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவ், ரஷ்யாவிற்கான இந்தியத் தூதர் வினய் குமார் மற்றும் பிற அதிகாரிகளும் உடனிருந்தனர்.</span></p>
<p> </p>
<p><span dir="auto"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/these-are-the-symptoms-of-viral-fever-know-remedies-272393" width="631" height="381" scrolling="no"></iframe></span></p>
Source: Read Full Article