
<p>கண்மாய் மண்ணை விவசாயத்துக்கு பயன்படுத்தாமல் விற்பதாக புகார் எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.</p>
<div dir="auto"><strong>மணல் விற்பனை செய்து வருவதாக கிராம மக்கள் புகார் </strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மணலூரில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாய் மூலம் சுமார் 300 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதனால் மணலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இந்தக் கண்மாய் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், விளைநிலங்களின் மேம்பாட்டுக்காக கண்மாயில் இருந்து வண்டல் மண் அள்ளுவதற்கு சிலர் உரிய அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அனுமதி பெற்றதன் அடிப்படையில் விவசாயப் பயன்பாட்டுக்கு மண்ணை அள்ளாமல், கட்டுமானப் பணிகளுக்காக சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் விற்பனை செய்து வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>விவசாயப் பயன்பாட்டிற்காக வண்டல் மண் அள்ள அனுமதி பெற்றுவிட்டு - கட்டுமான பணிக்கு பயன்பாடு</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">மேலும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கண்மாயில் இருந்து மண் அள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக மணலூர் கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.</div>
<div dir="auto">அவர்கள் கூறுகையில், “விவசாயப் பயன்பாட்டிற்காக வண்டல் மண் அள்ள அனுமதி பெற்றுவிட்டு, அந்த மண்ணை கட்டுமானப் பணிகளுக்காக சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண் அள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் கண்மாயின் நீர்ப்பிடிப்பு தன்மை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி, விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.</div>
Source: Read Full Article