
<h2>யார் இந்த தோப்பு வெங்கடாச்சலம்.?</h2>
<p>முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் கொங்கு மாவட்டமான ஈரோட்டில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். அதிமுகவில் ஈரோடு மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த முக்கிய பங்காற்றினார். பெருந்துறை தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது தமிழக அரசில் அமைச்சராகவும் பணியாற்றினார். இதனையடுத்து 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தோப்பு வெங்கடாச்சலத்திற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத காரணத்தால் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனையடுத்து 2021ஆம் ஆண்டு திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். </p>
<h2>தேர்தல் தோல்வி- காரணம் யார்.?</h2>
<p>அப்போது தோப்பு வெங்கடாச்சலத்திற்கு திமுகவின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியானது வழங்கப்பட்டது. மேலும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரிடம் தோப்பு வெங்கடாச்சலம் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் தோப்பு வெங்கடாச்சலம் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து தோப்பு வெங்கடாச்சலம் நீக்கப்பட்டுள்ளார். </p>
<h2>தோப்பு வெங்கடாச்சலம் நீக்கம்</h2>
<p>இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் அவர்களை, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஈரோடு மத்திய மாவட்டத்திற்குரிய சட்டமன்ற தொகுதிகளான பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்திலும், பவானி தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்திலும் இணைக்கப்பட்டு மாவட்ட கழகச் செயலாளர்கள் அந்தந்த நிர்வகிப்பார்கள் என தெரிவித்துள்ளார். </p>
<h2>காரணம் என்ன.?</h2>
<p>தோப்பு வெங்கடாச்சலத்திற்கும் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்த்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு முத்துசாமியும் காரணம் என தோப்பு வெங்கடாச்சலம் குற்றம்சாட்டியதாக தகவல் வெளியானது. இதனால் உட்கட்சி மோதல் அதிகரித்ததால் கட்சி பணியில் செயல்படாமல் தோப்பு வெங்கடாச்சலம் ஒதுங்கி இருந்ததாக கூறப்பட்டது. அதே நேரம் அதிமுகவில் தனக்கு போட்டியாக இருந்த பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a>வில் இணைந்துள்ளார்.</p>
<h2>அதிமுகவில் இணையும் தோப்பு வெங்கடாச்சலம்</h2>
<p>எனவே பெருந்துறையை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்த நிலையில், தோப்பு வெங்கடாச்சலம் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தான் மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து தொப்பு வெங்கடாச்சலத்தை திமுக நீக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே விரைவில் தோப்பு வெங்கடாச்சலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொள்வார் என தகவல் கூறப்படுகிறது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/entertainment/12-movies-and-web-series-ready-for-ott-viewing-269674" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article