
<p>ஆரோவில் : 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கின் ஒருபகுதியாக, 'வளர்ந்த பாரதத்திற்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள்' (Nasha Mukt Yuva for Viksit Bharat Sankalp Abhiyan) என்ற நாடு தழுவிய மாபெரும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மெய்நிகர் (Virtual) வாயிலாகத் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் சுமார் 28,000-க்கும் மேற்பட்ட இடங்களை இணைத்து நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட நிகழ்வின் ஒருபகுதியாக, ஆரோவில்லில் உள்ள பாரத் நிவாஸில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.</p>
<h2>1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு:</h2>
<p>ஆரோவில் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பாரத் நிவாஸில் ஒன்றுகூடி பிரதமரின் மெய்நிகர் உரையில் பங்கேற்றனர்.</p>
<p>குறிப்பாக, ஸ்ரீ மணக்குள விநாயகர் கல்வி நிறுவனங்கள், ஆச்சார்யா கல்வி நிறுவனங்கள், புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (PTU) மற்றும் வாசவி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.</p>
<h2>முக்கியத் தலைவர்கள் மற்றும் உறுதிமொழி ஏற்பு:</h2>
<p>இந்நிகழ்வில் குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலாளரும், ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளருமான டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி (IAS) சிறப்புரையாற்றினார். இளைஞர்கள் தங்களிடம் உள்ள ஆற்றலை ஆக்கபூர்வமான வழிகளிலும், தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளிலும் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மேலும், புதுச்சேரி அமைச்சர்கள் ஏ. நமச்சிவாயம், பி. ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. ராமலிங்கம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.</p>
<p>ஆரோவில் அறக்கட்டளையின் சிறப்புப் பணி அதிகாரி (OSD) டாக்டர் ஜி. சீதாராமன் தலைமையில், 'வளர்ந்த இந்தியாவை உருவாக்க போதைப்பொருள் இல்லாத இளைஞர்களாகத் திகழ்வோம்' என்ற உறுதிமொழியை தலைவர்களும் மாணவர்களும் இணைந்து ஏற் றனர்.</p>
<h2>பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை உரை:</h2>
<p>நாடு முழுவதிலும் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான 'மை பாரத்' (My Bharat) இளம் தன்னார்வலர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: "ஒரு இளைஞன் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும்போது, அது வெறும் தனிமனித இழப்பு மட்டுமல்ல; ஒரு குடும்பத்தின் கனவு சிதைகிறது, குடும்பத்தின் அமைதி உடைகிறது, ஒட்டுமொத்த தேசத்தின் வலிமையும் பலவீனமடைகிறது. போதைப்பொருள் கடத்தல் என்பது நம் நாட்டை உள்நாட்டிலேயே சீர்குலைக்க எதிரிகளால் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது."</p>
<p>மேலும், போதைப்பழக்கம் தொடர்பான சமூகப் பயத்தையும் தயக்கத்தையும் உடைக்க வேண்டும் என்று கூறிய பிரதமர், தங்கள் குழந்தைகள் போதைக்கு அடிமையாகி இருந்தால் சமூகக் கவுரவத்திற்காகப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அதை மறைக்கக் கூடாது என்றும், உடனடியாக மனம் விட்டுப் பேசி மருத்துவ உதவி பெற முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p>
<p>போதைப்ப பழக்கத்திலிருந்து மீண்டு வருபவர்களே உண்மையான போராளிகள் என்றும், அவர்களுக்குச் சமூகம் மறுவாழ்வுக்கான இரண்டாவது வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>
<h2>100 வாரங்களுக்கான விரிவான செயல்திட்டம்:</h2>
<p>மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இந்த பிரச்சாரத்திற்கான விரிவான 100 வாரச் செயல்திட்டத்தை விளக்கினார். 2.24 கோடி இளைஞர்களைக் கொண்ட 'மை பாரத்' வலையமைப்பு மற்றும் 125-க்கும் மேற்பட்ட ஆன்மீக அமைப்புகளின் ஆதரவோடு, அடுத்த 100 வாரங்களுக்குக் கலை, கலாச்சாரம், விளையாட்டு, தியானம் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகள் மூலம் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Source: Read Full Article