
<p>புதுச்சேரி: புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் அரிசியின் அளவை மாற்றியமைத்து, அரிசியுடன் கோதுமை மாவு, துவரம் பருப்பு, கேழ்வரகு மாவு, சர்க்கரை, நெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.</p>
<p>புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.14,300 கோடிக்கான வரியில்லா பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றினார். இதில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்காக பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.</p>
<h2>பால் உற்பத்தியாளர்களுக்கு சலுகைகள்</h2>
<p>தரமான பால் உற்பத்தியை அதிகரிக்கவும், பால் கறப்பதில் நிலவும் ஆள்பற்றாக்குறையை குறைக்கவும் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் 150 பயனாளிகளுக்கு நவீன பால் கறக்கும் இயந்திரங்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.</p>
<p>பால் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இல்லாத கால்நடை விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் 3,450 கறவைப் பசுக்கள் வழங்கப்படும். மேலும், மாட்டுத் தீவனம் மற்றும் 4 ஆயிரம் கன்றுகளுக்கு கன்றுத் தீவனமும் வழங்கப்படும்.</p>
<h2>குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் தொகுப்பு</h2>
<p>புதுச்சேரி மக்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசியுடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தொகுப்பாக வழங்க அரசு உத்தேசித்துள்ளது.</p>
<p>இந்த தொகுப்பில் கோதுமை மாவு, துவரம் பருப்பு, கேழ்வரகு மாவு, சர்க்கரை, நெய் உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<h2>பாண்லே நிறுவனத்தில் புதிய பால் பண்ணை</h2>
<p>தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பாண்லே நிறுவனத்தில் முழுமையான தானியங்கி வசதியுடன் தினமும் 2 லட்சம் லிட்டர் பாலை சுத்திகரித்து பேக்கிங் செய்யும் திறன் கொண்ட புதிய பால் பண்ணை அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனமான பாண்லே மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை, பாலின் தரத்தின் அடிப்படையில் உயர்த்தப்படும். அதிகபட்சமாக ஊக்கத்தொகை உட்பட லிட்டருக்கு ரூ.41 வரை வழங்கப்படும்.</p>
<h2>நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள்</h2>
<p>புதுச்சேரி நியாய விலைக் கடைகள் மூலம் துவரம் பருப்பு, உளுந்து, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அடக்க விலையில் விற்பனை செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.</p>
<p>மேலும், புதுச்சேரியின் முக்கியமான 10 இடங்களில் சிறிய அளவிலான அடக்க விலைக் கடைகள் அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.</p>
Source: Read Full Article